நெல்லை அரசு போக்குவரத்துக்கழக ஒரு நாள் வருவாய் ரூ.30 லட்சம் அதிகரிப்பு
தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு பேருந்து கட்டணம் மற்றும் பால் விலையை வரலாறு காணாத அளவு உயர்த்தியது. மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த கட்டண உயர்வால் தமிழகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் தினமும் சுமார் 2 கோடி பேர் பேருந்தில் பயணம் செய்கின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தில் பேருந்து கட்டண உயர்வு மக்களை பெரும் பாதிப்படைய செய்துள்ளது. அரசு போக்குவரத்துக் கழக நிர்வாகத்திற்கு வருவாய் இரட்டிப்பாகி இருப்பதாக கூறப்படுகிறது. பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதை அறிந்த அரசு போக்குவரத்துக் கழக நிர்வாகம் சாதாரண பேருந்துகளுக்கு அரசு நிர்ணயித்த விலை உயர்வை அப்படியே கிடப்பில் போட்டு விட்டு டீலக்ஸ் பேருந்துகள் ரேட்டிற்கு கட்டணத்தை பெற்று வருவதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
நெல்லை அரசு போக்குவரத்துக் கழகத்தில் தினமும் சுமார் 900 பேருந்துகள் தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் இயக்கப்படுகிறது. இந்த பேருந்துகளில் சாதாரண பேருந்துகள் அனைத்தையும் டி.எஸ்.எஸ்., எல்.எஸ்.எஸ் என்று போர்டை மாற்றிவிட்டு அரசு எக்ஸ்பிரஸ் பேருந்துகளுக்கு நிர்ணயம் செய்துள்ள கட்டணத்தை வசூலிக்கின்றனர்.
சாதாரண பேருந்துகள் எக்ஸ்பிரஸ் பேருந்துகளாக மாற்றப்பட்டுள்ளதால் கட்டணம் மிக அதிகமாக கொடுக்க வேண்டியிருக்கிறது. எக்ஸ்பிரஸ் என்றால் விரைவாக செல்ல வேண்டும். குறிப்பிட்ட வழித்தடங்களில் மட்டும் நிற்க வேண்டும். ஆனால் தற்போதுள்ள எக்ஸ்பிரஸ் பேருந்துகள் அனைத்து நிறுத்தங்களிலும் நின்று செல்வதால் பயணிகள் எரிச்சல் அடைந்துள்ளனர். இதனால் நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்கள் அரசு போக்குவரத்துக் கழகம் மீது கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.
இதற்கிடையில் பேருந்து கட்டண உயர்வால் நெல்லை அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு வருமானம் பல லட்சம் அதிகரித்துள்ளது. கடந்த 2010ம் ஆண்டு நவம்பர் மாதம் 20ம் தேதி நெல்லை அரசு போக்குவரத்துக் கழகத்தின் ஒரு நாள் வருவாய் ரூ.63 லட்சம் ஆகும். 2011ம் ஆண்டு நவம்பர் மாதம் 20ம் தேதி கணக்கின்படி நெல்லை அரசு போக்குவரத்துக் கழகத்தின் ஒரு நாள் வருவாய் ரூ. 93 லட்சம். அதாவது ரூ.30 லட்சம் அதிகரித்துள்ளது. இன்னும் கலெக்ஷன் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக போக்குவரத்துக் கழக வட்டாரங்கள் தெரிவித்தன.