இஷ்ரத்தைக் கொன்றவர்களை தூக்கிலிட வேண்டும்- இஷ்ரத் குடும்பத்தினர் வலியுறுத்தல்
கடந்த 2004 ஆம் ஆண்டு குஜராத் முதலமைச்சர் நரேந்திரமோடியை கொலை செய்ய வந்த தீவிரவாதிகள் என்று கூறி அகமதாபாத் அருகே இளம் பெண் இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட நான்கு பேரும் சுட்டுக்கொல்லப்பட்டனர். இது போலி என்கவுண்டர் என்றும் போலீசார் தவறான தகவலை அளித்துள்ளனர் என்றும் குஜராத் உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட எஸ்ஐடி எனப்படும் சிறப்பு புலனாய்வுக் குழு திங்கட்கிழமையன்று அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இது நரேந்திர மோடி அரசுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
மகளை திரும்ப தரவேண்டும்
இது குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த இஷ்ரத்தின் தாயார், குஜராத் முதலமைச்சர் நரேந்திரமோடியின் தவறுகளை சுட்டிக்காட்டியதாலேயே தமது மகள் கொலை செய்யப்பட்டதாக குற்றஞ்சாட்டியுள்ளார். எஸ்ஐடியின் அறிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள இஷரத்தின் தாயார், என்மகள் என்ன தவறு செய்தாள் ? எதற்காக அவளை கொலை செய்தனர் என்று உருக்கத்துடன் கேட்டுள்ளார். அவளை இழந்து நான் தவிக்கிறேன். என் மகளை எனக்கு திரும்ப தரமுடியுமா? என்று கூறிய அவர், நரேந்திரமோடி எங்களின் குடும்பத்திற்கு நீதி அளிக்க வேண்டும். என்னுடைய மகளை மீண்டும் எங்களிடம் தரவேண்டும் என்றும் கேட்டுகொண்டார்.
மரண தண்டனை தர வேண்டும்
இதேபோல், தமது தங்கை அனைவருக்கும் முன்னுதாரணமாக விளங்கிய பெண். அவளுக்கு ஏன் இத்தகைய கொடுமையான தண்டனை வழங்கப்பட்டது என்று தெரியவில்லை என்று கூறினார். என் தங்கையை இழந்து நான் தனிமையில் தவிக்கிறேன். அவளை கொன்றவர்களுக்கு மரணம்தான் சரியான தண்டனையாக இருக்கும். எனவே அவர்களை உடனடியாக தூக்கில் போடவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.