3 ஆண்டில் கசாபிற்கு ரூ. 16 கோடி செலவு: சிறப்பு அறை மட்டுமே ரூ.5.3 கோடி
மும்பை: மும்பை தாக்குதல் வழக்கில் கைதாகி கடந்த 3 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் கசாபிற்கு மகராஷ்டிரா அரசு இதுவரை ரூ.16 கோடி செலவு செய்துள்ளது.
26/11 மும்பை தாக்குதல் வழக்கி்ல் கைதான பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் கசாப், மும்பை ஆர்தர் ரோடு சிறையில் உள்ள சிறப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளான். இன்னும் 4 நாட்களில் மும்பை தாக்குதல் நடந்து 3 ஆண்டு நிறைவடையவிருக்கிறது.
இந்நிலையில் கசாபிற்காக மாநில அரசு இதுவரை செலவளித்துள்ள கணக்கு விவரங்கள் வெளியாகியுள்ளன. ஆர்தர் ரோடு சிறையில் கசாபிற்கு ரூ. 5.3 கோடியில் சிறப்பு அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்தோ-திபெத் எல்லை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவனது உணவு, மருத்துவ செலவு, பாதுகாப்பு, சிறப்பு அறை அமைப்பு என இதுவரை ரூ. 16.17 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.
கசாபிற்கு சிறப்பு அறை அமைக்க ரூ. 5.29 கோடி, பாதுகாப்பு பணியில் இந்தோ-திபெத் எல்லை போலீசாரை ஈடுபடுத்த ரூ.10.87 கோடி, உணவு செலவு ரூ. 27,520 மற்றும் மருத்துவ செலவு ரூ. 26,953.
கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் 26ம் தேதி மும்பைக்குள் புகுந்த 10 தீவிரவாதிகள் பல்வேறு இடங்களில் நடத்திய தாக்குதல்களில் 100க்கும் மேற்பட்டோர் பலியாகினர், பலர் காயம் அடைந்தனர். இந்த வழக்கில் கைதாகிய கசாபிற்கு கடந்த மே மாதமே மும்பை நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. ஆனால் கசாப் அதை எதிர்த்து மேல் முறையீடு செய்துள்ளான்.
இந்நிலையில் கசாப் ஒரு தீவிரவாதி அவனை தூக்கிலிடுங்கள் என்று அண்மையில் பாகிஸ்தான் தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.