புது வக்கீல்கள் நியமனம் குறித்து சிறையில் கனிமொழியுடன் ஸ்டாலின் ஆலோசனை
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு டெல்லி திகார் சிறையில் உள்ள கனிமொழி, முன்னாள் அமைச்சர் ஆ. ராசா, கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குநர் சரத்குமார் ஆகியோருக்கு ஜாமீன் கிடைக்கும் வகையில் வாதாட புதிய வழக்கறிஞர்களை நியமிக்க திமுக முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக டெல்லி சென்றுள்ள தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் திகார் சிறையில் உள்ள கனிமொழி உள்ளிட்ட மூவரையும் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
2 ஜி வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 6 மாத காலமாக சிறையில் உள்ள மாநிலங்களவை திமுக எம்.பி. கனிமொழிக்கு பல முறை ஜாமீன் கோரி விண்ணப்பித்தும் ஜாமீன் கிடைக்கவில்லை. எனவே வழக்கறிஞர்களை மாற்றிவிட்டு திறமையான வழக்கறிஞர்களை நியமிக்க திமுக முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக டெல்லி சென்றுள்ள மு.க. ஸ்டாலின் அங்குள்ள தொடர்பாக வழக்குரைஞர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
திகார் சிறையில் சந்திப்பு
இதன் பின்னர் திங்கட்கிழமை மாலை திகார் சிறைக்கு சென்ற ஸ்டாலின் சிறை எண் 6-க்கு சென்று கனிமொழியைச் சந்தித்துப் பேசினார். பின்னர் சிறை எண் 4-ல் உள்ள சரத் குமாரிடமும், 1-ம் சிறையில் உள்ள ஆ. ராசாவிடமும் பேசினார். மூவருடனான இந்த சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்றது.
அப்போது வழக்கு சார்பாக வழக்குரைஞர்களிடம் நடத்திய ஆலோசனை குறித்தும், தி.மு.க. தலைவர் கருணாநிதி தெரிவித்த கருத்துகளையும் அவர் கனிமொழியிடம் பகிர்ந்து கொண்டதாக கூறப்படுகிறது.