கூடங்குளம் அணுமின் நிலையம் முற்றுகை- 2,000 பேர் மீது வழக்கு
வள்ளியூர்: கூடங்குளம் அணுமின் நிலையத்தை முற்றுகையிட்ட 2,000 பேர் மீது போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரி கடந்த 3 மாதங்களாக அப்பகுதி மக்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். மீனவர் தினமான நேற்று 800க்கும் மேற்பட்டோர் பைபர் படகுகளில் கடல் வழியாக சென்று கூடங்குளம் அணுமி்ன் நிலையத்தை முற்றுகையிட்டனர். மேலும் கருப்பு கொடி ஏந்தி அணுமின் நிலையங்களுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
இந்த போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 2,000 பேர் மீது கூடங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். போராட்டக்குழு அமைப்பாளர் உதயகுமார் தலைமையிலான பெயர் தெரிந்த 15 பேர் உள்பட 2,000 பேர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்திய அரசுக்கு எதிராக பிரசாரம் செய்வது, மக்களிடையே இன, மொழி, மதம் சம்பந்தமாக விரோதத்தை தூண்டுதல், இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்படுவது, சட்ட விரோதமாக கூடியது, தடை செய்யப்பட்ட கூடங்குளம் அணுமின் நிலைய பகுதிக்குள் அத்துமீறி நுழைந்தது, மத்திய அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.