சென்னை உயர் நீதிமன்றத்தின் 150வது ஆண்டு விழா -26ல் தொடக்க விழா
கடந்த 1862ம் ஆண்டு ஆங்கிலேய ஆட்சியின் போது சென்னை உயர்நீதிமன்றம் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டது. சென்னையில் கடற்கரை ஓரமாக உள்ள உயர் நீதிமன்றம், தமிழகம் மற்றும் பாண்டிசேரி பகுதிகளைச் சேர்ந்த வழக்குகளை விசாரித்து வருகிறது. இந்த நீதிமன்றம் கட்டப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த நிறைவு விழாவை சிறப்பாகக் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த கொண்டாட்டங்கள் வரும் 26ம் தேதி முதல் துவங்குகின்றன. இதில் உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் குடும்பத்துடன் கலந்துகொள்கின்றனர்.
வரும் 26ம் தேதி காலை 9.30 மணிக்கு இசை நிகழ்ச்சியுடன் விழா துவங்குகிறது. இதில் கவிஞர் வைரமுத்து எழுதிய உயர் நீதிமன்றத்தின் கருத்து பாடல் முதலில் பாடப்படுகிறது. இது தவிர பல மொழிப் பாடல்கள் பாடப்படவிருக்கின்றன.
இதையடுத்து உச்ச நீதிமன்ற நீதிபதி பி.சதாசிவத்தின் மனைவி சரஸ்வதி, நீதிபதி ஏ.கே.கங்குலியின் மனைவி ரூமா, நீதிபதி எச்.எல்.கோகலேவின் மனைவி மீனா, நீதிபதி முகோபாத்தியாயாவின் மனைவி சந்த்ராய், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பாலின் மனைவி இபாத் இக்பால், ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எப்.எம்.இப்ராகிம் கலிபுல்லாவின் மனைவி அமீரா கலிபுல்லா, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தர்மாராவின் மனைவி பத்மா புஷ்பாஞ்சலி ராவ், நீதிபதி டி.முருகேசனின் மனைவி சுதா ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றுகின்றனர்.
அதன் பிறகு நீதிபதி தர்மாராவ் வரவேற்புரையாற்றுகிறார். அடுத்ததாக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் தலைமையில் சட்டத்தின உறுதிமொழி எடுக்கப்படுகிறது. அதன் பிறகு அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன், தமிழக சட்டத்துறை அமைச்சர் எம். பரஞ்ஜோதி ஆகியோர் உரை நிகழ்த்துகின்றனர்.
அதைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எப்.எம்.இப்ராகிம் கலிபுல்லா சிறப்புரையாற்றுகிறார். எம்.ஒய்.இக்பால் தலைமையுரை ஆற்றுகிறார். அவரை அடுத்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.ஜே.முகோபாத்தியாயா, ஏ.கே.கங்குலி, பி.சதாசிவம் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.
தொடர்ந்து உயர் நீதிமன்றத்திற்கான புதிய அருங்காட்சியக கட்டிடத்திற்கு உச்ச நீதிமன்ற நீதிபதி அல்டமாஸ் கபீர் அடிக்கல் நாட்டி வைத்து உரையாற்றுகிறார். இறுதியில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி டி. முருகேசன் நன்றியுரை கூறுகிறார். காலை 9.30 மணிக்கு துவங்கும் இந்த விழா மதியம் 12.45 மணிக்கு நிறைவடைகிறது.