பால் விலை, பஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு- 24ம் உண்ணாவிரதம் இருக்கிறார் விஜயகாந்த்
சென்னை: தமிழக அரசு பஸ் கட்டணம், பால் விலையை உயர்த்தியதைக் கண்டித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் அக்கட்சியினர் 24ம் தேதி சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகின்றனர்.
அதிமுக கூட்டணியில் இணைந்த பின்னர், முதல் முறையாக அதிமுகவை எதிர்த்து விஜயகாந்த் நடத்தும் போராட்டம் இது என்பதால் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.
இதுதொடர்பாக விஜயகாந்த் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,
அ.தி.மு.க. அரசு பஸ் கட்டணத்தையும், பால் விலையையும் மிக அதிகமாக உயர்த்தியுள்ளது. இதனால் ஏழைகளின் வாழ்க்கைச் செலவு இருமடங்கு அதிகரித்துள்ளது. போக்குவரத்துக் கழகங்களும், ஆவின் நிறுவனமும் பெரும் நஷ்டத்தில் உள்ளதாகவும், அவை முடங்கும் நிலையில் உள்ளதாகவும், அதனால் இந்தக் கட்டண உயர்வை மேற்கொண்டதாகவும் முதல்வர் கூறியுள்ளார்.
பொதுத் துறை நிறுவனங்களை சீர்படுத்த அக்கறை எடுத்துக் கொள்ளும் முதல்வர், கட்டண உயர்வால் திண்டாடும் ஏழை, நடுத்தர குடும்பங்களின் மக்கள் நிலையையும் கருத்தில் கொள்ள வேண்டும். அதற்கு மாறாக எதிர்க்கட்சிகள் மீது குற்றம்சாட்டுவது என்ன நியாயம்? அரசின் இந்தப் போக்கை மாற்றிக் கொள்ள வலியுறுத்தி வியாழக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை தே.மு.தி.க. சார்பில் கோயம்பேடு தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் எனது தலைமையில் உண்ணாவிரதம் நடைபெறும்.
மாவட்டங்களில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே தே.மு.தி.க. சார்பில் உண்ணாவிரதம் மேற்கொள்ளப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை மாபெரும் போராட்டமாக மாற்றி அதிமுகவுக்கு தங்களது செல்வாக்கைக் காட்டப் போவதாக தேமுகவினர் கூறி வருகின்றனர்.