பட்டமளிப்பு விழாவில் ஒயர் சேரில் உட்கார மறுத்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு
சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஒயர் சேரில் உட்காரச் சொன்னதால் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஆத்திரத்தில் விழாவை புறக்கணித்து வெளியேறினர்.
பின்பு ஆளுநர் வருவதைப் பார்த்து மீண்டும் வந்து ஒயர் சேர்களில் அமர்ந்தனர்.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் 11வது பட்டமளிப்பு விழா நேற்று முன்தினம் நடந்தது. அந்த விழாவில் தமிழக ஆளுநர் ரோசைய்யா, உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன், துணை வேந்தர் முத்துசெழியன் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இந்த விழா பல்கலைக்கழக கூட்ட அரங்கில் நடந்தது. அங்கு செனட் உறுப்பினர்கள், வி.ஐ.பி.க்கள், பத்திரிகையாளர்கள், மாணவர்கள், பெற்றோர் அமர்வதற்காக இருக்கைகள் போடப்பட்டிருந்தன. காலை 10.45 மணிக்கு சேலம் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. செல்வராஜ் தலைமையில் வீரபாண்டி எம்.எல்.ஏ. செல்வம், மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. வெங்கடாசலம், ஓமலூர் எம்.எல்.ஏ. பல்பாக்கி கிருஷ்ணன் உள்ளிட்டோர் அரங்கிற்கு வந்தனர்.
அவர்கள் நேராக சென்று முன்வரிசையில் இருந்த சோபாவில் அமர்ந்தனர். உடனே அங்கிருந்த மேட்டூர் ஆர்.டி.ஓ. சூர்யபிரகாஷ் செல்வராஜ் உள்ளிட்டவர்களை அடுத்த வரிசையில் உள்ள ஒயர் சேரில் அமருமாறு தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் விழாவைப் புறக்கணிப்பதாகக் கூறி வெளியேறினர்.
அந்த நேரம் ஆளுநர் ரோசைய்யா, அமைச்சர் பழினியப்பன் மற்றும் வி.ஐ.பி.க்கள் காரில் வந்து இறங்கினர். இதைப் பார்த்த எம்.எல்.ஏ.க்கள் விவகாரம் முதல்வர் காதுக்கு எட்டினால் பிரச்சனையாகிவிடும் என்று நினைத்து அமைதியாக வந்து ஒயர் சேர்களில் அமர்ந்தனர். விழா முடியும் வரை சோபா காலியாகவே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.