குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
நெல்லை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இன்று காலையிலும் தொடர்ந்து மழை பெய்தது. தென்காசி, செங்கோட்டை,குற்றாலம், அம்பை,நாங்குநேரி உள்ளிட்ட பலஇடங்களில் கனமழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் குற்றாலத்தில் இரண்டு தினங்களாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரதான அருவியில் ஆர்ச்சை தாண்டி தண்ணீர் கொட்டுவதால் கடைவீதிகளில் தண்ணீர் வெள்ளமாக ஓடுகிறது. இதனால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அருவிகளில் குளிக்க முடியாததால் சுற்றுலா வந்துள்ள ஐயப்ப பக்தர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குற்றால அருவிகளில் தண்ணீர் அதிகளவில் கொட்டுவதால் தென்காசி சிற்றாறில் வெள்ளப்பெருக்கு எற்பட்டுள்ளது. ஆகவே ஆற்றில் யாரும் குளிக்க வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.