திமுக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு
கோவை: திமுக முன்னாள் அமைச்சரும், கோவை மாவட்ட செயலாளருமான பொங்கலூர் பழனிச்சாமி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று காலை முதல் சோதனை நடத்தினர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகனின் வீடு, அலுவலகங்கள், பொறியியில் கல்லூரி என மொத்தம் 9 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்நிலையில் திமுக முன்னாள் அமைச்சரும், கோவை மாவட்ட செயலாளருமான பொங்கலூர் பழனிச்சாமி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று காலை சோதனை நடத்தினர்.
பொங்கலூர் பழனிச்சாமியின் வீடு கோவை திருச்சி ரோட்டில் உள்ள கிருஷ்ணா காலனியில் உள்ளது. இன்று காலை 6.55 மணி்க்கு திருச்சி லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. அம்பிகாபதி தலைமையிலான லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் கண்காணிப்பு பிரிவு போலீசார் அவரது வீட்டிற்கு சென்றனர். அப்போது வீட்டில் பொங்கலூர் பழனிச்சாமி, அவரது மகனும், தெற்கு மண்டல முன்னாள் தலைவருமான பைந்தமிழ் பாரி, மகள் வித்யா ஆகியோர் இருந்தனர்.
பொங்கலூர் பழனிச்சாமி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாகக் கிடைத்த புகாரை அடுத்து இன்று அவரது வீட்டில் சோதனை நடந்தது. பொங்கலூர் பழனிச்சாமியிடம் 100க்கும் மேற்பட்ட கோள்விகள் கேட்கப்பட்டன.
அவரது வீட்டில் சோதனை நடந்த அதே நேரத்தில் திருச்சி ரோட்டில் உள்ள பொங்கலூர் பழனிச்சாமியின் மில் அலுவலகத்திலும், கோவை அருகே உள்ள பாப்பம்பட்டி பிரிவு பாரதிபுரத்தில் உள்ள கலைஞர் கருணாநிதி பொறியியல் கல்லூரியிலும் சோதனை நடத்தினர். அப்போது பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகக் கூறப்படுகிறது.
இந்த தகவல் கிடைத்ததும் திமுகவினர் பொங்கலூர் பழனிச்சாமியின் வீட்டுக்கு முன்பு கூடினர். ஏற்கனவே அவர் மீது திருப்பூரைச் சேர்நத வெங்கடேஷ் என்பவர் நில அபகரிப்பு புகார் கொடுத்திருந்தார். இது குறித்து நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து அவர் தலைமறைவாகி விட்டார். சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரிய அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் கொடுத்தது. அதன் பிறகே அவர் கோவை திரும்பினார்.
பொங்கலூர் பழனிச்சாமியின் மகன் பைந்தமிழ் பாரி தனது தந்தை மீது புகார் கொடுத்தவரை அந்த புகாரை வாபஸ் பெறுமாறு மிரட்டிய வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.