தமிழகத்திலிருந்து ஒரு வண்டியும் வரக் கூடாதாம், அவர்கள் வரலாமாம்: கேரள லாஜிக்!
திருவனந்தபுரம்: முல்லைப்பெரியாறு விவகாரத்தையொட்டி தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் வாகனங்கள் எல்லையிலேயே தடுத்து நிறுத்தப்படுகின்றன. ஆனால் கேரளா வாகனங்கள் மட்டும் தமிழகத்திற்குள் தங்குதடையின்றி வந்து போய்க் கொண்டுள்ளன.
முல்லைப்பெரியாறு அணை விவகாரம் பெரிதாகிக் கொண்டிருக்கிறது. புதிய அணை கட்டியே தீருவோம் என்று கேரள அரசு அறிவித்துள்ளது. அதைத் தடுத்து நிறுத்துவதில் தமிழகம் தீவிரமாக உள்ளது. இந்நிலையில் முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ள இடுக்கி மாவட்டத்தில் நேற்று பந்த நடந்தது. இன்று இரண்டாவது நாளாக பந்த் தொடர்கிறது.
தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் வாகனங்கள் எல்லையிலேயே தடுத்து நிறுத்தப்படுகின்றன. ஆனால் கேரள வாகனங்கள் எந்தவித பிரச்சனையும் இன்றி தமிழக்திற்குள் வந்து செல்கின்றன. தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு காய்கறி உள்ளிட்ட பொருட்கள் வழக்கம் போல் போய்க் கொண்டிருக்கிறது.
கேரள வாகனங்களை தமிழக மக்கள் தடுக்காமல் அமைதியாக உள்ளனர். ஆனால் கேரளாவுக்குள் எந்த தமிழக வாகனமும் போக முடியவில்லை. போடி மெட்டு பகுதியைத் தாண்டி தமிழக வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும் கேரளாவுக்குள் போயுள்ள தமிழக வாகனங்களுக்கும் பேராபத்து காணப்படுகிறது. தமிழக வாகனங்களை தடுத்து நிறுத்தும் கேரளாக்காரர்கள், அதில் உள்ளவர்களை மிரட்டும் தொணியில் பேசி வருகின்றனராம்.
இதனால் தமிழக மக்கள் குறிப்பாக ஐயப்ப பக்தர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
இதற்கிடையே கேரள அரசியல் தலைவர்கள் சர்ச்சைக்குரிய முல்லைப் பெரியாறு அணைக்கு சென்று அதை பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளனர்.
முல்லைப் பெரியாறு அருகே புதிய அணை கட்ட கேரள அரசு ரூ.600 கோடி நிதி ஒதுக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.