சோவியத் யூனியன் போல இந்தியா உடையும் பிரைம் மினிஸ்டர்!- வைகோ ஆவேசம்!!
டெல்லி வந்த வைகோ இன்று காலை பிரதமரை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக நடந்த இந்த சந்திப்பு 20 நிமிடங்கள் நீடித்தது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தமிழக, கேரள மாநிலங்களுக்கு இடையிலான சுமூக உறவு பாதிக்கபப்ட்டுள்ளது. கேரளா கூறுவதைப் போல முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக இல்லை. மிகவும் பலமாக,வலுவாக உள்ளது. நிலநடுக்கத்தால் அணையில் பாதிப்பு என்ற கேரளாவின் வாதம் பொய்யானதாகும்.
அணையின் பலம் மற்றும் பாதுகாப்பு குறித்து கேரளா கூறி வரும் பொய்ப் பிரசாரத்தையும், பொய்யான குற்றச்சாட்டுக்களையும் பிரதமர் நம்பக் கூடாது என்று அவரிடம் தெரிவித்தேன்.
கடந்த சில நாட்களாக கேரள அரசியல் கட்சியினர் சிலர் அணைப் பகுதியிலேயே போராட்டங்களில் குதித்துள்ளனர். அணையை சேதப்படுத்த முயல்கின்றனர். கடப்பாரை, சம்மட்டியுடன் சென்று உடைக்கப் போவதாக கூறினார்கள். கேரள போலீஸாரைத் தாக்கி விட்டு உடைக்கப் போகிறார்கள்.
எனவே இப்படிப்பட்டவர்களிடம் எங்களது அணையைப் பாதுகாக்க கொடுக்க முடியாது. மேலும் கேரள அமைச்சரே அணையை உடைப்போம் என்கிறார். கேரள அரசே அணையை உடைப்பதாக கூறிய பின்னர் கேரள போலீஸை எப்படி நம்ப முடியும்.
எனவே முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய போலீஸ் படையை அங்கு குவியுங்கள் என்று பிரதமரிடம் கேட்டுக் கொண்டேன். இதைச் செய்யாவிட்டால், முல்லைப் பெரியாறு அணை உடையும் நிலை உருவானால் அது எங்களது தென் தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியா முழுமைக்கும் கடும் விளைவுகளை ஏற்படுத்தும். சோவியத் யூனியன் போல இந்தியா சிதறிப் போகும் பிரைம் மினிஸ்டர் அவர்களே. இதற்காக வருத்தப்படக் கூடாது, இந்தியாவின் ஒற்றுமை சிதறிப் போகும், சுக்கல் சுக்கலாகி விடும் என்று அவரிடம் வலியுறுத்திக் கூறினேன்.
அணையின் பாதுகாப்பு கருதி அங்கு மத்திய படையை நிறுத்த வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தி பிரதமருக்கு கடிதம் எழுதியிருப்பதை அவரிடம் சுட்டிக் காட்டி அந்தப் பாதுகாப்பை செய்யுமாறு கேட்டுக் கொண்டேன்.
கேரள அரசு புதிய அணை கட்டினால் நிச்சயம் எங்களுக்குத் தண்ணீர் தராது. அது பல விஷயங்களில் சொன்னதைச் செய்யவில்லை.இப்போதும் செய்யாது. எனவே கேரள அரசின் செயல்பாடுகளை உடனடியாக தடுத்து நிறுத்துங்கள். இதைச் செய்ய வேண்டியது மத்திய அரசின் கடமை. இதைச் சொல்ல வேண்டியது எங்களின் கடமை. இதற்கு மேலும் நீங்களே பார்த்துக் கொள்ளுங்க்ல என்று கூறினால், மத்திய அரசு தனது கடமையிலிருந்து விலகுமானால், என்ன செய்ய வேண்டுமோ அதை தமிழக மக்கள் செய்வார்கள் என்று பிரதமரிடம் கூறி விட்டு வந்துள்ளேன்.
முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக கேரள அரசு கூறி வரும் அனைத்துமே பொய்யானவை, தவறான தகவல்கள். எனவே கேரள அரசின் பேச்சுக்களையும், பிரசாரத்தையும் கேரள மக்கள் நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார் வைகோ.