முல்லைப் பெரியாறு பாதுகாப்புக்கு மத்திய தொழிலக பாதுகாப்புப் படையை நிறுத்துக-ஜெ. கோரிக்கை
இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள கடிதம்:
முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பது எங்கள் அரசுக்கு மிகவும் கவலை அளிப்பதாக இருக்கிறது என்பதை தங்களது கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். அணைப் பகுதியில் கேரளாவைச் சேர்ந்த சில அரசியல் கட்சிகள் வன்முறையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வந்துள்ளன.
கடந்த 3-ந் தேதி, 200 பேர் கொண்ட கும்பல் அணையில் தமிழ்நாடு மின்சார வாரிய கேட்டை சேதப்படுத்தியுள்ளது. (4-12-2011 அன்று கேரளாவில் உள்ள வல்லகடவு என்ற இடத்தில் இருந்து விஷமிகள் ஜேசிபி மற்றும் சில உபகரணங்களுடன் அணையில் இருந்து தண்ணீரை வெளியேற்றவும், அணையை சேதப்படுத்தும் நோக்கிலும் அங்கு சென்றுள்ளனர்.
நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல, அணையின் பாதுகாப்பு தொடர்பாக மக்களிடம் பீதி ஏற்படுத்தும் நோக்கில் கேரள அரசு செய்த திட்டமிட்ட பிரசாரம்தான், தற்போது அணையின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் சூழ்நிலையை உருவாக்கி உள்ளது.
முல்லைப் பெரியாறு அணையைவிட மிகவும் பழமையான அணைகள் இன்னமும் நல்ல நிலையில் செயல்பட்டு வருகின்றன என்பதை சுட்டிக்காட்டுவது இப்போது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன்.
தமிழ்நாட்டில், 2-ம் நூற்றாண்டில் கரிகால் சோழனால் கட்டப்பட்ட கல்லணை, 1900 ஆண்டுகளைக் கடந்து இன்னமும் உறுதியாக இருந்து, எந்தவித பிரச்சினையும் இல்லாமல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தொடர்ந்து நன்கு பராமரித்து வருவதே இந்த அணையின் நீண்ட ஆயுளுக்கான ரகசியம் ஆகும். தமிழ்நாட்டில் டெல்டா பகுதியில் வசிக்கும் மக்கள், கல்லணை இடிந்துவிடும் என்பது போன்ற அச்சத்தில் வாழ்ந்து கொண்டிருக்கவில்லை.
அதுபோல, 1845 மற்றும் 1855-ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்ட கோதாவரி அணையையும், கிருஷ்ணா கதவணையையும் ஆந்திர மாநில நீர்ப்பாசனத் துறை இன்னமும் பராமரித்து வருகிறது. 1900 ஆண்டுகளுக்கு முன்பு கல்லாலும், சுர்கி'யாலும் கரிகால் சோழன் கல்லணை கட்டியதுபோல, முல்லைப் பெரியாறு அணையை மேஜர் பென்னிகுயிக் கட்டியுள்ளார் என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.
கேரள ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்ச் முன்பு, முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது அந்த மாநில அட்வகேட் ஜெனரல் ஆஜராகி, முல்லைப் பெரியாறு அணையில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டாலும், அதன் கீழே உள்ள இடுக்கி, குலமாவு, சேருதோணி அணைகளால் முல்லைப் பெரியாறு அணையின் நீரைத் தாங்கிக் கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளார்.
இது, முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்புடன் இருப்பதாக கேரளா அரசே அங்கீகரிப்பதாக உள்ளது. கேரள அரசு அறியாமல் செய்த பிரசாரத்தால் அச்சமும், பதற்றமும் கொண்ட சூழ்நிலை உருவாகி இருக்கும் நிலையில், பிரதமர் மட்டத்தில் அனுபவமிக்க, அறிவுசார்ந்தவர்கள் இந்தப் பிரச்சினையை கையாளுவதுதான் சரியாக இருக்கும்.
முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் நடந்துள்ள வன்முறை செயல்களைக் கருத்தில் கொண்டும், அவரச, அவசியத்தைக் கருதியும் அங்கு மத்திய படையை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த வேண்டும்.
முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் மனிதர்களால் ஏற்படுத்தப்படும் மோசமான பேரழிவை தடுக்க, அங்கு உடனடியாக மத்திய தொழில் பாதுகாப்புப் படையை (சி.ஐ.எஸ்.எப்.) பாதுகாப்புப் பணியில் ஈடுபட உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று முதல்வர் கோரியுள்ளார்.