கனிமொழியின் ஜாமீன் எந்த நேரத்திலும் ரத்து செய்யப்படலாம்-சுப்பிரமணிய சாமி
நிருபர்களிடம் அவர் பேசுகையில், முல்லைப் பெரியாறு அணை விவகாரம் பெரும் சர்ச்சையாக மாறியற்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி தான். இந்த விவகாரத்தில் நான் கடந்த 1998ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன்.
அந்த வழக்கில் 2006ம் ஆண்டே அணையில் நீரைத் தேக்கும் உயரத்தை 124 அடியாக உயர்த்துமாறு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. அதை எதிர்த்து இதுவரை யாரும் தடை வாங்கவில்லை.
ஆனாலும், நீரை தேக்கும் உயரத்தை அப்போது ஆட்சியில் இருந்த கருணாநிதி உயர்த்தவில்லை. ஆனால், இப்போது இந்த விவகாரத்தில் பிரதமருக்கு கருணாநிதி கடிதம் எழுதுவது வேடிக்கையாக உள்ளது.
இந்த அணை விவகாரம் குறித்து கேரள அரசுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். தமிழக, கேரள மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவோர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிறையிலிருந்து திரும்பிய கனிமொழிக்கு திமுக அளித்த வரவேற்பு தேவையற்றது. அவரது ஜாமீன் எந்த நேரத்திலும் ரத்து செய்யப்படலாம்.
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் ராசா எந்த அளவுக்கு ஊழல் செய்துள்ளாரோ அதே அளவுக்கு உள்துறை அமைச்சர் சிதம்பரமும் குற்றம் செய்துள்ளார். ப.சிதம்பரம் நீதிமன்றத்திற்கு பயந்து ஓடி ஒளிகிறார் என்றார் சாமி.