தமிழக ஐயப்ப பக்தர்கள், லாரிகள் மீது கேரளாவில் தாக்குதல்- கூடலூர், கம்பத்தில் மக்கள் மறியல்

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசியல்வாதிகள் நடந்து கொள்ளும் விதத்தால் தமிழக, கேரள மக்களிடையே ஒற்றுமை பாதிக்கப்படும் அபாயம் அதிகரித்து வருகிறது. தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் கேரளாவில் தாக்கப்படும் நிலையும் உருவாகியுள்ளது.
இந்த நிலையில் நேற்று இரவு தமிழகத்திலிருந்து சபரிமலைக்குச் சென்ற ஐயப்ப பக்தர்களின் வேன் மீது சில விஷமிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஐயப்ப பக்தர்கள் மீதும் தாக்குதல் நடத்ப்பட்டதாக தெரிகிறது.
லாரிகள் மீது தாக்குதல்
இதேபோல நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் தமிழகத்தை சேர்ந்த 2 லாரிகள் கேரளாவில் இருந்து குமுளி வழியாக தமிழ்நாட்டுக்கு வந்து கொண்டு இருந்தன. குமுளி போலீஸ் நிலையம் அருகே அந்த லாரிகளை கேரளாவை சேர்ந்த கும்பல் வழிமறித்து பயங்கர ஆயுதங்களுடன் தாக்கினர்.
பயந்துபோன 2 டிரைவர்கள், கிளீனர்கள் லாரியில் இருந்து குதித்து உயிரை காப்பாற்ற தப்பி ஓடினர். என்றாலும் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் ஆயுதங்களால் லாரிகளின் கண்ணாடிகளை உடைத்தனர். லாரிகளின் பாகங்களையும் அடித்து நொறுக்கினர். குமுளி போலீஸ் நிலையம் அருகிலேயே இந்த சம்பவம் நடந்தது. ஆனால் கேரள போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை.
இந்த நிலையில், இந்தத் தகவல் தேனி மாவட்ட காவல்துறைக்குத் தெரிய வந்தது.
இதையடுத்து மாவட்ட எல்லை வழியாக செல்லும் ஐயப்ப பக்தர்களின் வாகனங்களையும் பிற வாகனங்களையும் கம்பம், குமுளி, போடி மெட்டு ஆகிய பகுதிகளில் போலீஸார் நிறுத்தி வைத்தனர். பக்தர்களின் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். இன்று அதிகாலை 4 மணிக்கு மேல் தமிழக வாகனங்களை போலீஸார் அனுமதித்தனர்.
கூடலூரில் சாலை மறியல்
தமிழக பக்தர்கள் மற்றும் வேன் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரவியதும் பெருமளவிலான மக்கள் தேனி-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் திரண்டனர்.
பின்னர் அவர்கள் குமுளி நோக்கிச் செல்லத் தொடங்கினர். ஆனால் அவர்களை போலீஸார் கூடலூரில் மடக்கி நிறுத்தினர். இதையடுத்து அவர்கள் அங்கேயே சாலை மறியலில் ஈடுபட்டனர். நூற்றுக்கணக்கானோர் திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சாலைப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. கேரளாவுக்குச் செல்லும் வாகனங்கள் தேங்கி நின்றன.
பெருமளவில் திரண்ட பொதுமக்கள் தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு செல்லும் எந்த வாகனங்களையும் போகவிடாமல் தடுத்தனர். கேரளாவுக்கு காய்கறிகள் ஏற்றி சென்ற லாரிகள், டெம்போ வேன்கள் மற்றும் பஸ்களும் தடுத்து நிறுத்தப்பட்டன. இரு சக்கர வாகனங்களையும் போக விடாமல் தடுத்தனர்.
அதேபோல கேரளாவில் இருந்து வந்த வாகனங்களை தமிழகத்திற்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தினர். இதனால் பதட்டம் நிலவியது. சம்பவ இடத்தில் உத்தமபாளையம் போலீஸ் டி.எஸ்.பி. ஸ்டாலின் தலைமையில் அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டனர். போலீசார் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டம் காரணமாக கூடலூர் முழுவதும் பதட்டம் நிலவியது. இதையடுத்து பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. போலீஸாரும் கூடுதலாக குவிக்கப்பட்டனர். கேரள வாகனங்கள் மீது தாக்குதல் நடந்து விடாமல் கண்காணிப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
கம்பம் மெட்டு
இதேபோல கம்பம்மெட்டு பகுதியிலும் நூற்றுக்கணக்கானோர் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் இங்கும் சாலைப் போக்குவரத்து கடுமையான பாதிப்பைச் சந்தித்தது.












Click it and Unblock the Notifications