அணை கட்ட நிதி: தமிழக தொழிலாளர்களை மிரட்டி வசூல், பெண்களிடம் அத்துமீறல் முயற்சி
கம்பம்: முல்லைப் பெரியாறு அணை அருகே புதிய அணை கட்ட நிதி கேட்டு ஒரு கும்பல் தமிழக தொழிலாளர்களை மிரட்டிப் பணம் வசூலித்துள்ளது. பணம் தர மறுத்த பெண்களிடம் அத்துமீறி நடக்க முயன்றுள்ளது.
முல்லைப் பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டுவதில் கேரள அரசு முனைப்பாக உள்ளது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில் கேரள இளைஞர் காங்கிரஸார் நேற்று முல்லைப் பெரியாறு அணைக்குள் அத்துமீறி நுழைந்து தகராறு செய்துள்ளனர்.
தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடும் தலைமதகு பகுதிக்குள் நுழைந்து தமிழக பொதுப் பணித்துறை மற்றும் மின்வாரிய அலுவலகங்களை சூறையாடி பணியில் இருந்தவர்களையும் தாக்க முயன்றுள்ளனர். அந்த ஊழியர்கள் உயிருக்கு பயந்து வனப்பகுதிக்குள் ஓடிவிட்டனர்.
காங்கிரஸார் அணைக்கு ஊர்வலமாக வந்து அங்கிருந்த தமிழ் விளம்பர போர்டுகளை எல்லாம் அடித்து நொறுக்கினர். இதையடுத்து அணையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தேனி மாவட்டம் சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம், கூடலூர், கோம்பை, தேவாரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கேரள மாநிலம் நெடுங்கண்டம், கட்டப்பணை, மேட்டுக்குழி, மாழி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏலம், காபி தோட்டங்களுக்கு ஏராளமான தொழிலாளர்கள் வேலைக்கு சென்று வருவது வழக்கம்.
தோட்ட உரிமையாளர்கள் தமிழக தொழிலாளர்களை ஜீப் வைத்து அழைத்துச் செல்கின்றனர். இதற்காக தமிழகத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான ஜீப்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இன்று காலை வழக்கம் போல் தமிழக தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு சென்ற ஜீப்களை கம்பம் மெட்டில் வைத்து ஒரு கும்பல் வழிமறித்தது. பின்னர் அவர்கள், முல்லைப் பெரியாறு அணை அருகே அணை கட்ட நிதி திரட்டுமாறு எங்கள் அரசு வலியுறுத்தியுள்ளது. கேரளாவுக்குள் செல்ல வேண்டும் என்றால் ரூ.100 கொடுக்க வேண்டும் என்று கூறி தகராறு செய்துள்ளது.
இதனால் பயந்துபோன தொழிலாளர்கள் பணத்தை கொடுத்துள்ளனர். பணம் கொடுத்தவர்களுக்கு 'டிரைவர்ஸ் அசோசியேஷன்" என்று மலையாளத்தில் அச்சடிக்கப்பட்ட ரசீது கொடுக்கப்பட்டுள்ளது. அதில் பதிவெண்ணே இல்லை.
இதனால் சந்தேகம் அடைந்த சில ஜீப் டிரைவர்கள் பணம் கொடுக்க மறுத்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் ஜீப்களில் இருந்த தமிழ் பெண்களை கீழே இழுத்து தள்ளிவிட்டு அவர்களிடம் அத்துமீறி நடக்க முயன்றனர். இதை பார்த்த மற்ற பெண்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். பயத்தில் பலர் வேலைக்கு செல்லாமல் வீடு திரும்பினர்.
இதனால் தேனி மாவட்டத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. வீண் பிரச்சனைகளை கிளப்பிவிட்டு கேரளா வன்முறையைத் தூண்ட முயல்வதாக தொழிலாளர் அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன.












Click it and Unblock the Notifications