தமிழக உறவு சீர்கெடும்படி நடந்தால் கடும் நடவடிக்கை- வன்முறையாளர்களுக்கு சாண்டி எச்சரிக்கை
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தைப் பயன்படுத்தி தமிழர்கள் மீதான வன்முறையை கேரளாவில் சிலர் ஏவியுள்ளனர். குறிப்பாக இடுக்கி மாவட்டத்தில் பல பகுதிகளிலும் தமிழக சுற்றுலாப் பயணிகள், ஐயப்ப பக்தர்கள், தொழிலாளர்களைக் குறி வைத்து கடும் தாக்குதல் நடந்துள்ளது. தமிழர்களின் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. வாகனங்கள் தாக்கப்பட்டுளளன.
இதையடுத்து எல்லை நகரமான குமுளியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கபப்ட்டுள்ளது. தமிழகத்திலிருந்து அந்த பாதை வழியாக ஒரு வாகனமும் அனுமதிக்கப்படாமல் தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று இரவு கேரள மாநில அமைச்சரவையின் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அம்மாநில அட்வகேட் ஜெனரல், கேரள உயர்நீதி்மன்றத்தில் முல்லைப் பெரியாறு அணை குறித்து தாக்கல் செய்த அறிக்கை குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் முதல்வர் சாண்டி. அப்போது அவர் கூறுகையில், முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் நாம் சுய கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தைப் பயன்படுத்தி யாரும் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில், குறிப்பாக தமிழகத்துடனான நல்லுறவை சீர்குலைக்கும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது. அப்படி நடப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மேலும் அவர் கூறுகையில், அமைச்சரவைக் கூட்டத்தில் அட்வகேட் ஜெனரலின் அறிக்கை குறித்து மட்டுமே விவாதிக்கப்பட்டது. செவ்வாய்க்கிழமை அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும். 9ம் தேதி சட்டசபையின் சிறப்புக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. ஒரு நாள் இது நடைபெறும்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரளத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் உள்ளன என்றார் சாண்டி.