முல்லைப் பெரியாறு: உச்ச நீதிமன்ற அரசியல் சாசன பெஞ்ச் இன்று விசாரணை
டெல்லி: முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தமிழகம், கேரள மாநில அரசுகள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுக்கள் மீது அரசியல் சாசன பெஞ்ச் இன்று விசாரணை நடத்துகிறது.
முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக உள்ளதாக கேரள அரசு பரப்பி வரும் பொய்த் தகவல்களை தடுக்க வேண்டும் என்றும் அணைக்கு மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையின் பாதுகாப்புத் தர வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
அதேபோல முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்ட அளவை 120 அடியாகக் குறைக்க உத்தரவிட வேண்டும், அதை தமிழக அரசு செய்யவில்லை என்றால் நீர் மட்ட அளவைக் குறைத்துக் கொள்ள கேரள அரசுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கோரி கேரள அரசும் மனு தாக்கல் செய்துள்ளது
இது தவிர அணையின் நீர்மட்டத்தைக் குறைக்க வலியுறுத்தி அணை நீர்ப் பிடிப்புப் பகுதியில் வசிக்கும் 19 கேரளத்தினர் இணைந்து தனியாக ஒரு மனுவையும் தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில் முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக கேரள அரசு முன்வைத்துள்ள கோரிக்கைகளை நிராகரிக்க வேண்டும் என்று திமுக சார்பிலும் தனியாக ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதிகள் டி.கே. ஜெயின், ஆர்.எம். லோதா, தீபக் வர்மா, சந்திர மௌலி கே.ஆர். பிரசாத், அனில் ஆர். தவே ஆகிய 5 பேர் அடங்கிய அரசியல் சாசன பெஞ்ச் முன் இன்று விசாரணைக்கு வருகின்றன
முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்ட அளவை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்த உச்ச நீதிமன்றம் கடந்த 2006ம் ஆண்டு தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பு அமலாகாமல் தடுக்க கேரள அரசு தனது சட்டசபையில் அணைப் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம் செய்தது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பையே தடுக்ககேரள அரசு கொண்டு வந்த சட்டத் திருத்தம் அரசியல் சட்டத்துக்கு உட்பட்டதா என்பது குறித்து விசாரிக்க இந்த அரசியல் சாசன பெஞ்ச் அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த பெஞ்ச் தான் அணை பலமாக உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்ய கமிட்டியையும் அமைத்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்த பெஞ்ச் முன்னிலையில் தான் இன்று புதிய மனுக்களும் விசாரணைக்கு வருகின்றன.