லோக்பால் மசோதாவை நிறைவேற்ற குளிர்கால கூட்டத்தொடரை நீட்டிக்க ஹசாரே கோரிக்கை
டெல்லி: வலுவான லோக்பால் மசோதவை தாக்கல் செய்ய ஏதுவாக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை நீட்டிக்க வேண்டும் என்றும் அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார்.
இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
லோக்பால் மசோதா நிறைவேறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஒருவேளை அவர்கள் லோக்பால் மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றவில்லை எனில், நாங்கள் போராட்டத்தில் இறங்குவோம். லோக்பால் மசோதா மீது விவாதம் நடத்த காலம் போதவில்லை எனில் லோக்பால் மசோதாவை நிறைவேற்றுவதற்காக பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை நீட்டிக்க வேண்டும். லோக்பால் மசோதா நாட்டுக்கு முக்கியமானது. பாராளுமன்ற கூட்டத்தொடர் நீட்டிக்கப்பட்ட உதாரணங்கள் இதற்கு முன்பு நிறைய உள்ளன. அதுபோல் இப்போதும் செய்யலாம். ஆட்சி அதிகாரத்தில் உள்ள அனைவரும் லோக்பால் மசோதாவை நிறைவேற்றுவோம் என்று உறுதி அளித்துள்ளனர். அவர்களை நாங்கள் நம்புகிறோம்
மீண்டும் போராட்டம்:
நாடாளுமன்றத்தில் லோக்பால் மசோதா நிறைவேற்றப்படவில்லை என்றால், திட்டமிட்டப்படி 27ம் தேதி உண்ணாவிரதம் இருப்பேன். பருவ நிலை நன்றாக இருந்தால் டெல்லியில் உண்ணாவிரதம் மேற்கொள்வேன். அப்போதுள்ள பருவ நிலையை பொறுத்து உண்ணாவிரத இடம் முடிவு செய்யப்படும்.
இல்லையெனில் உண்ணாவிரதம் வேறு இடத்துக்கு மாற்றப்படும். சி.பி.ஐ. அமைப்புக்கு தன்னாட்சி அந்தஸ்து அளிக்கப்படவேண்டும் என்று சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சி, இடதுசாரிகள், பாரதீய ஜனதா போன்ற கட்சிகள் குரல் கொடுக்கின்றன. ஆனால் காங்கிரஸ் தரப்பில் இருந்து சத்தமே வரவில்லை. இதில் அவர்களது கருத்து என்ன என்பதை அறிய விரும்புகிறேன் என்றார்.