அணைக்கு மத்திய படை பாதுகாப்பு தேவையில்லை: தமிழக அரசின் மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி
டெல்லி: முல்லைப் பெரியாறு அணைக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பு தேவையில்லை என்று மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ததால் தமிழக அரசின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
முல்லைப் பெரியாறு அணைக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பு போடக் கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனு கடந்த 13ம் தேதி விசாரணைக்கு வந்தபோது இந்த விவகாரம் குறித்து 15ம் தேதிக்குள், அதாவது இன்று பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி மத்திய அரசு இன்று பதில் மனு தாக்கல் செய்தது. அதில் முல்லைப் பெரியாறு அணைக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பு தேவையில்லை என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது.
இது தொடர்பாக கேரள அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், முல்லைப் பெரியாறு அணைக்கு மாநில அரசு போதிய பாதுகாப்பு அளிக்கும் என்று உறுதியளித்திருந்தது.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் அணைக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பு கோரும் தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
அதே போல இந்த விவகாரம் குறித்து இரு மாநிலங்களின் கூட்டத்தைக் கூட்ட பிரதமருக்கு கோரிக்கை வைக்க வேண்டும் என்ற கேரள அரசின் கோரிக்கையையும் உச்ச நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. கூட்டுக் கூட்டத்தில் பங்கேற்க தமிழகம் விரும்பாத நிலையில் அதை வலியுறுத்த முடியாது என்று நீதிமன்றம் தெரிவித்துவிட்டது.