லோக்பால் விசாரணை குழுவில் தலித், பிற்படுத்தப்பட்டோருக்கு 50% இட ஒதுக்கீடு-மத்திய அரசு அதிரடி
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடக்கும் இக் கூட்டத்தில் இந்த மசோதாவின் வரம்புக்குள் பிரதமர், சி.பி.ஐ, மத்திய கண்காணிப்பு ஆணையம், அரசு ஊழியர்களில் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு ஊழியர்கள் ஆகியோரை கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டு முடிவெடுக்கப்படவுள்ளது.
இன்று நடக்கும் அமைச்சரவை கூட்டத்தில் இந்த மசோதாவுக்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டு, ஒப்புதல் பெறப்படும் என்று தெரிகிறது. கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு இன்று இந்த மசோதாவை இறுதி செய்ய முடியாவிட்டால், நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நீட்டிக்கப்படும் என்றும் தெரிகிறது.
முன்னதாக நேற்று மாலை இந்த மசோதா குறித்து பிரதமர் மன்மோகன் சி்ங், மூத்த அமைச்சர்களான பிரணாப் முகர்ஜி, சல்மான் குர்ஷித், கபில் சிபல், ப.சிதம்பரம், நாராயணசாமி உள்ளிட்டவர்களிடம் தீவிர ஆலோசனை நடத்தினார்.
அதில் பிரதமரையும் லோக்பால் வரம்புக்குள் கொண்டு வருவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
மேலும் 100 எம்பிக்கள் கையெழுத்திட்டு கோரிக்கை விடுத்தால், லோக்பால் அமைப்பின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நீக்கவும் இந்த மசோதாவில் புதிய விதியைச் சேர்க்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதைவிட முக்கியமான இந்த அமைப்புக்கு நியமிக்கப்படும் விசாரணை பெஞ்ச்சில் (நீதிபதிகள் குழு மாதிரி) 50 சதவீதத்தை தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மற்றும் பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கோரிக்கையை பாஜக தவிர்த்த அனைத்துக் கட்சிகளும் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
அரசு ஊழியர்களில் 'சி' பிரிவு ஊழியர்கள் ஊழல் செய்யாமல் தடுக்க அவர்களை மத்திய கண்காணிப்பு ஆணையத்தின் கீழ் கொண்டு வரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் லோக்பால் மசோதா நிறைவேற்றப்படாவிட்டால் வரும் 27ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரம் இருக்கப்போவதாக ஹசாரே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் இந்த அமைப்பில் இடஒதுக்கீடு என்ற விஷயத்தை மத்திய அரசு முன் வைத்துள்ளது. இதை ஹசாரே குழு ஏற்குமா அல்லது எதிர்க்குமா என்பது தெரியவில்லை. இதை எதிர்த்தால், நாட்டின் பெரும்பான்மையினராக உள்ள தலித், பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரிடம் ஹசாரே குழுவுக்கு கெட்ட பெயர் ஏற்படும்.
இதனால் இதை ஹசாரே எதிர்க்க வேண்டும் என்று தான் மத்திய அரசும் எதிர்பார்க்கிறது!.