பெங்களூர் தென் மாநில முதல்வர் கூட்டத்தின்போது ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்த சாண்டி
பெங்களூரில் நேற்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் தென் மாநில முதல்வர்கள் கூட்டம் நடந்தது. அதில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கேரளா சார்பில் உம்மன் சாண்டியும், தமிழகத்தின் சார்பில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் பங்கேற்றனர்.
கூட்டத்தின் இடையே பன்னீர் செல்வத்தை சந்தித்துப் பேசினார் சாண்டி. பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் சர்ச்சை ஏற்பட்டதற்கு பின், இரு மாநிலங்களின் தலைவர்களுக்கு இடையே நடந்த முதல் சந்திப்பு இது. இந்த விவகாரத்தில் கேரளாவின் கருத்து என்ன என்பதை, தமிழக நிதியமைச்சரிடம் எடுத்துக் கூறினேன்.
முல்லைப் பெரியாறு அணையை பொறுத்தவரை, கேரளாவுக்கு பாதுகாப்பு, தமிழகத்துக்கு தண்ணீர் என்பது தான், எங்களின் நிலை. இதை அவரிடம் தெரிவித்தேன்.
முல்லைப் பெரியாறு தண்ணீர், தமிழகத்துக்கு தேவை என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம். எங்களுக்கு தேவையான காய்கறி, பழங்கள் ஆகியவை தமிழகத்தில் இருந்து தான் வர வேண்டும். இதை நாங்கள் மறுக்கவில்லை. அதேசமயம், இந்த அணை, 115 ஆண்டுகளுக்கு முன், பழைமையான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டப்பட்டது. அணையின் பாதுகாப்பு தன்மை குறித்து, இங்குள்ள மக்கள் கவலைப்படுகின்றனர்.
கேரள மக்களின் பாதுகாப்பிலும் நாங்கள் கவனம் செலுத்த வேண்டும். வேண்டுமானால், தமிழகத்துக்கு தண்ணீர் அளிப்பதை உறுதி செய்யும் வகையில், கேரள சட்டசபையில் சட்டம் நிறைவேற்றவும் தயார் என, தமிழக அமைச்சரிடம் கூறினேன். இதை முதல்வர் ஜெயலலிதாவிடம் தெரிவிக்குமாறும் கேட்டுக் கொண்டேன் என்றார் சாண்டி. தனது கருத்துக்களை முதல்வர் ஜெயலலிதாவிடம் தெரிவிப்பதாக ஓ.பன்னீர் செல்வம் கூறியதாகவும் சாண்டி தெரிவித்தார்.