தாக்குதல் எதிரொலி: கோவை- கேரளா இடையே பஸ் போக்குவரத்து நிறுத்தம்- பயணிகள் அவதி
கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கேரள மாநிலத்தவர் அதிகம் வசித்து வருகின்றனர். இப்பகுதிகளில் ஏராளமான மலையாளிகள் வர்த்தக நிறுவனங்கள் வைத்துள்ளனர், தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வருவதற்காக கோவையில் இருந்து கேரள மாநிலம் பாலக்காடு உள்ளிட்ட நகரப் பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
அதேபோல் கேரளாவில் இருந்தும் கோவை நகருக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனிடையே முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையால் கடந்த சில வாரங்களாக தமிழ்நாட்டில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள் மீது மலையாளிகள் சிலர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில் பயணிகள் பலரும் காயமடைந்துள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு பாலக்காடு அருகே தமிழ்நாடு அரசுப் பேருந்து மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 2 குழந்தைகள் உட்பட 4 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
போக்குவரத்து நிறுத்தம்
இதன் எதிரொலியாக கோவையில் இருந்து கேரளாவிற்கு இயக்கப்படும் பேருந்துகள் நேற்றிரவு முதல் நிறுத்தப்பட்டுள்ளன. பயணிகளின் பாதுகாப்பு கருதி போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேபோல் கேரளாவில் இருந்து கோவை நகருக்கு இயக்கப்படும் பேருந்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் இருமாநில பயணிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.