ரூ.60 லட்சம் மதிப்புள்ள போதைப் பொருள் கடத்தல்: ஐயப்ப பக்தர் உட்பட 4 பேர் கைது
சென்னை: ஆந்திராவில் இருந்து சென்னைக்கு ரூ.60 லட்சம் மதிப்புள்ள போதைப் பொருளை 2 மோட்டார் சைக்கிள்களில் வைத்து கடத்த முயன்ற ஐயப்ப பக்தர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை எழும்பூரை அடுத்த எத்திராஜ் சாலை வழியாக 4 வாலிபர்கள் சேர்ந்து போதைப் பொருள் கடத்துவதாக உளவுப் பிரிவு போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது.
இது குறித்த தகவல் அறிந்த இணை கமிஷனர் சேஷசாயி உத்தரவின் பேரில், துணை கமிஷனர் பாஸ்கரன், உதவி கமிஷனர் சரவணன் உள்ளிட்டோரின் மேற்பார்வையிலான போலீஸ் படை எத்திராஜ் சாலையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமான முறையில் ஒரு மோட்டர் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டியில் வந்த 4 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் சென்னை செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூரைச் சேர்ந்த தமிழ்செல்வம்(23), கோடம்பாக்கம் வெள்ளாள தெருவைச் சேர்ந்த ரபீக்(22), தியாகராய நகர் முத்துரங்கன் சாலையைச் சேர்ந்த செல்வம்(30), வடபழனி மன்னர் முதலியார் தெருவைச் சேர்ந்த திலீப்குமார்(20) என்பது தெரிய வந்தது.
இதில் செல்வம் சபரிமலைக்கு செல்வதற்காக மாலை போட்டுள்ளார். திலீப் குமார் என்ஜினியரிங் கல்லூரி ஒன்றில் இ.சி.இ. 2ம் ஆண்டு படித்து வருகிறார். இவர்கள் 4 பேரும் சேர்ந்து மோட்டர் சைக்கிளில் போதைப் பொருள் கடத்த முயன்றது தெரிய வந்தது.அவர்களிடம் இருந்து ரூ.60 லட்சம் மதிப்புள்ள கேட்டமைன் போதைப் பொருள் அடங்கிய கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த கும்பலுக்கு போதைப் பொருளை சப்ளை செய்த நெற்குன்றத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். மத்திய பிரதேசத்தில் இருந்து லாரி மூலம் போதைப் பொருள் ஆந்திராவுக்கு கொண்டு வரப்படுகிறது. அங்கிருந்து இந்த 4 பேர் கொண்ட கும்பல் சென்னைக்கு கொண்டு வந்து அதனை சிறு கவர்களில் அடைத்து கல்லூரி மாணவர்களுக்கு சப்ளை செய்ய முயன்றது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
இது குறித்து போலீசார் கூறியதாவது,
இந்த போதைப் பொருள் கடத்தல் சம்பவத்தின் பின்னணியில் பெரும் கும்பலே இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்த கடத்தல் கும்பலின் தலைவன் ராஜ்குமார் சிக்கினால் இது குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 4 பேரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட கேட்டமைன் வகை போதைப் பொருள் ரூ.60 லட்சம் மதிப்புடையது என்றனர்.












Click it and Unblock the Notifications