சசியைத் தொடர்ந்து ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி மாற்றம்
முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் 14 பேர் அதிமுகவில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்டனர். இதையடுத்து போயஸ் தோட்டத்தில் இருந்து சசிகலா உள்ளிட்டோர் வெளியேற்றப்பட்டனர்.
இந்த நிலையில் ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரிகளும் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி ஜெயலிலதாவின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த டி.எஸ்.பி. திருமலைச்சாமி மாற்றப்பட்டுள்ளார். இவர் சசிகலாவின் சமூகத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
சசிகலா நீக்கத்துக்கு முன்பே இவரை உளவுப் பிரிவினர் கண்காணித்து வந்ததாகவும், இவரது வீட்டுக்கு சசிகலாவின் உறவினர்கள் மற்றும் தொழிலதிபர்கள் வந்து செல்வது உறுதியானதாகவும் தெரிகிறது.
இதையடுத்து இவர் மாற்றப்பட்டுள்ளார். அந்த இடத்திற்கு சென்னை அண்ணாநகர் உதவி கமிஷனராக இருந்த பாலசுப்ரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து தற்போது போயஸ் தோட்டத்தில் ஜெயலலிதாவின் பாதுகாப்புக்காக இருந்த போலீசார் பலரும் மாற்றப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு பதிலாக அதிவிரைவு அதிரடிப்படையைச் சேர்ந்தவர்கள் பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த அதிரடிப்படை வீரர்களில் பெரும்பாலோரை தேர்வு செய்தவர் தேவாரத்தின் சிஷ்யராரான 'வீரப்பன் புகழ்' விஜய்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், போயஸ் தோட்டத்திற்கு வரும் அனைவரும் கடும் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுவதாக கூறப்படுகின்றது.