ஆந்திராவில் புதையல் இருப்பதாக கூறி ரூ. 3 லட்சம் பணமோசடி செய்த வாலிபர் கைது
கோபி: ஈரோட்டை சேர்ந்த வியாபாரியிடம் புதையல் இருப்பதாக கூறி ரூ.3 லட்சம் பணத்தை மோசடி செய்த ஆந்திர வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடியை அடுத்த பி.மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் நடராஜன்(44). அதே பகுதியில் ஸ்வீட் கடை வைத்து உள்ளார். அவரது ஸ்வீட் கடைக்கு அடிக்கடி வந்து சென்ற ரமணய்யா என்பவருடன் நடராஜனுக்கு பழக்கம் ஏற்பட்டது.
இந்த நிலையில் ஆந்திராவை சேர்ந்த ரமணய்யாவுக்கு தனது சொந்த ஊரில் ரூ.10 மதிப்புள்ள தங்கப் புதையல் கிடைத்ததாகவும், அதனை ரூ.5 லட்சம் கொடுத்தால் நடராஜனுக்கு தருவதாகவும் ரமணய்யா கூறினார்.
அதனை நம்பிய நடராஜன், புதையலை பெறுவதற்காக ரூ.3 லட்சம் முன்பணமாக கொடுத்தார். அந்த பணத்தை பெற்று கொண்ட ரமணய்யா புதையலில் கிடைத்ததாக கூறி ஒரு தங்கக்கட்டியை நடராஜனுக்கு கொடுத்தார்.
ரமணய்யா சென்ற பிறகு அவர் கொடுத்த தங்கக்கட்டியை நடராஜன் பரிசோதித்து பார்த்தார். அப்போது அது தங்கக்கட்டி அல்ல என்பதும், தான் ஏமாற்றப்பட்டதையும் நடராஜன் உணர்ந்து கொண்டார்.
இது குறித்து நடராஜன் அளித்த புகாரின் பேரில், கவுந்தப்படி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் கவுந்தப்பாடியை அடுத்த கிருஷ்ணாபுரம் சோதனை சாவடி வழியாக பைக்கில் சென்ற வாலிபரை பிடித்து விசாரித்தனர்.
போலீசாரிடம் விசாரணையில் முன்னுக்கு முரணாக அவர் பதில் அளித்தார். அதனால் அவரை பிடித்து தீவிரமாக விசாரித்தனர். அப்போது அந்த வாலிபர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ரமணய்யா என்பதும், நடராஜனை புதையல் ஆசை காட்டி ஏமாற்றியவர் என்பது தெரிய வந்தது.
இதனையடுத்து ரமணய்யாவை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ரமணய்யா இதேபோல பெருந்துறை, திருப்பூர் உள்ளிட்ட பல இடங்களில் மோசடியில் ஈடுபட்டுள்ளது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.