எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு காணாத சோம்பேறி மத்திய அரசு-ராம கோபாலன் தாக்கு
திருச்செந்தூர்: இந்தியாவில் மத்திய அரசு ஒரு சோம்பேறி அரசாக செயல்படுகிறது. எந்த ஒரு பிரச்சனையையும் தீர்ப்பதில் மத்திய அரசு அக்கறை செலுத்துவதில்லை என்று இந்து முன்னணி அமைப்பாளர் ராமகோபாலன் தெரிவித்து உள்ளார்.
திருச்செந்தூரில் உள்ள கே.டி.எம். திருமண மண்டபத்தில் இந்து முன்னணி மண்டல பொதுக் குழு கூட்டம் தெற்கு மாவட்ட தலைவர் முருகேசன் தலைமையில் நடந்தது.
அப்போது இந்து முன்னணி அமைப்பாளர் ராமகோபாலன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
இன்று அணுமின் சக்தி பெறுவது, காலத்தின் கட்டாயமாக உள்ளது. ஆனால் அதனால் ஏற்படும் மக்களின் கவலையையும் அச்சத்தையும் போக்க வேண்டும். கூடன்குளம் அணுமின் நிலையம் மூலம் தமிழகத்தின் மின்சார தேவையை ஒரளவு கட்டுப்படுத்த முடியும். இந்த அணுமின் நிலையத்தை இயங்க விடாமல் வெளிநாட்டு சக்தி ஈடுபட்டு உள்ளது.
போராட்டக்காரர்களுக்கு பணம் எங்கிருந்து வருகின்றது என்பதை மத்திய அரசு தீவிரமாக கண்காணித்து தடுக்க வேண்டும். அதேபோல் கூடங்குளம் எதிர்ப்பாளர்கள் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமை அவமதித்துள்ளனர். எனவே அணுமின் நிலைய எதிர்ப்பாளர்களை தேசிய பாதுபாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.
தேசிய ஒருமைப்பாட்டை நிலை நிறுத்த நதிநீர் இணைப்பு அவசியம். நாட்டின் இயற்கை வளங்களை தேசியமயமாக்க வேண்டும். மத்திய அரசு ஒரு சோம்பேறி அரசாக செயல்படுவதால், எந்த ஒரு பிரச்சனையையும் தீர்ப்பதில் அக்கறை செலுத்தாமல் உள்ளது.
முல்லை பெரியாறு பிரச்சனையை அரசியல் ஆக்க கூடாது. மக்களின் அச்சத்தை போக்க வேண்டும். முல்லை பெரியார் தண்ணீர் தமிழகத்துக்கு கண்டிப்பாக வேண்டும். இரு மாநிலங்களுக்கு இடையே பொருளாதார தடை விதிக்க கூடாது. இது அழிவை ஏற்படுத்தும் என்பதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், என்றார்.