இந்தியர்கள் பயன்படுத்தாத பயறு வகையை இறக்குமதி செய்த உணவுத்துறை-இழப்பு ரூ. 1,200 கோடி!-சிஏஜி
2ஜி லைசென்ஸ் விற்பனையில் நடந்த முறைகேடுகளால் நாட்டுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டதாக குற்றம் சாட்டி பரபரப்பை ஏற்படுத்தியது சிஏஜி. இதையடுத்து பல தலைகள் உருண்டன.
இந் நிலையில் மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் உணவுத்துறையில் நடந்துள்ள முறைகேடுகளை சிஏஜி பட்டியலிட்டுள்ளது. 2006ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டு வரை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் உணவுத்துறை அமைச்சரான பிறகு பயறு இறக்குமதியில் நடந்துள்ள தவறுகளை சிஏஜி சுட்டிக் காட்டியுள்ளது.
உரிய கணிப்போ அல்லது கண்காணிப்போ இல்லாமல் பயறுகளை இறக்குமதி செய்ததில் ரூ.1201 கோடியே 32 லட்சம் வரை அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக, நாடாளுமன்றத்தில் சிஏஜி தாக்கல் செய்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக மஞ்சள் பட்டாணி (lentils or yellow peas) இறக்குமதியில் தான் 75 சதவீத இழப்பு, அதாவது ரூ. 897 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியர்கள் பெரிய அளவில் பயன்படுத்தாத இந்த பயறு ஏற்கனவே கிட்டங்களில் தேங்கிக் கிடந்த நிலையில், எதற்காக இது அதிகளவில் இறக்குமதி செய்யப்பட்டது என்பது தெரியவில்லை, இதனால் பயறுகளின் விலைவாசியும் குறையவில்லை என்று சிஏஜி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த இழப்புக்கு காரணமான மத்திய நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது வினியோக துறை அமைச்சகத்துக்கு அறிக்கையில் கண்டனமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், உலகளவில் உணவு தானியங்களுக்கு தட்டுப்பாடு நிலவியபோது தான் இந்த பயறு இறக்குமதி முடிவை மத்திய உணவுத்துறை எடுத்ததாகவும், இந்தியர்கள் பயன்படுத்தும் பயறு வகை சர்வதேச சந்தையில் கிடைக்காததால், அதற்கு இணையான மஞ்சள் பட்டாணி இறக்குமதி செய்யப்பட்டதாகவும் உணவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.