ராஜ்யசபாவில் பெரும் டிராமா.. லோக்பால் மசோதா நிறைவேறவில்லை!- கூட்டத் தொடரும் முடிந்தது!
டெல்லி: ராஜ்யசபாவில் கடும் டிராமாவுக்குப் பின் லோக்பால் மசோதா நிறைவேற்றப்படாமலேயே கூட்டத் தொடர் முடிவடைந்தது.
லோக்சபாவில் ஒரு வழியாக நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால், கூட்டணிக் கட்சியான மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் பல முக்கிய திருத்தங்களைக் கோரியது. இதை செய்யாவிட்டால், மசோதாவை ஆதரிக்க முடியாது என்று கூறிவிட்டது.
234 பேர் கொண்ட ராஜ்யசபாவில் காங்கிரஸ் கூட்டணிக்கு, திரிணமூலை சேர்த்தே, 97 எம்பிக்கள் தான் உள்ள நிலையில் இதை நிறைவேற்றுவது சாத்தியமே இல்லை என்பது காலையிலேயே தெரிந்துவிட்டது.
ஆனாலும், முலாயம் சிங், லாலு பிரசாத் உள்ளிட்ட கட்சிகளுடன் மத்திய அரசு பேசிப் பார்த்தது. இதில் லாலுவின் ஆதரவு மட்டுமே கிடைத்தது. இதையடுத்து எப்படியாவது டைம் பாஸ் செய்து கூட்டத் தொடரையே முடிவுக்குக் கொண்டு வந்து தப்பிவிடும் முடிவுக்கு காங்கிரஸ் வந்தது.
நேற்று வரை நாடாளுமன்றக் கூட்டத்தை நடத்த அனுமதி பெற்றிருந்த நிலையில், காலையில் இருந்து இரவு 11 மணி வரை மசோதா மீது நீண்....ட விவாதம் நடந்தது. பல கட்சிகளும் 137 திருத்தங்களைத் தந்தன. அதன் மீதும் விவாதம் நடந்தது.
11.15 மணிக்கு நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சர் நாராயணசாமி எழுந்து, எதிர்க் கட்சிகளின் விவாதத்துக்கு பதிலளிக்க ஆரம்பித்தார். அவரே பேசிக் கொண்டே போக, ஓட்டெடுப்பு நடத்துங்கள் என பாஜக, இடதுசாரிகள் கூச்சலிட்டனர்.
இந் நிலையில் லாலுவின் கட்சி எம்பி ஒருவர் ஓடி வந்து நாராயணசாமியின் கையில் இருந்த லோக்பால் மசோதாவை பறித்து கிழித்து வீசினார். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
தொடர்ந்து நாராயணசாமி பேசிக் கொண்ட போக, ஓட்டெடுப்பு நடத்துங்கள் இல்லாவிட்டால் அவையை மேலும் ஒரு நாளுக்கு நீட்டியுங்கள் என பாஜக, இடதுசாரிகள் கோர, அதை ஏற்க ராஜ்யசபா தலைவரான துணை ஜனாதிபதி அன்சாரி மறுத்துவிட்டார்.
இப்படியே 12 மணி வரை நேரம் ஓடிவிட, நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரும் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டு அவை வந்தே மாதரம் பாடலோடு ஒத்தி வைக்கப்பட்டுவிட்டது.
இதன்மூலம் ராஜ்யசபாவில் லோக்பால் மசோதா நிறைவேற்றப்படலாமலேயே கூட்டத் தொடரும் முடிந்துவிட்டது.












Click it and Unblock the Notifications