புதிய ஆண்டில் பல சாதனைகளை படைக்க உழைப்போம்!- முதல்வர் ஜெயலலிதா

நாளை மலரும் ஆங்கிலப் புத்தாண்டு 2012 குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா, மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பு:
புதுப்பொலிவுடன் புத்தாண்டு புலர்கின்ற இந்த இனிய நன்னாளில் தமிழக மக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்க மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
தமிழகம் அனைத்து துறைகளிலும் முதன்மை மாநிலமாக நிகழ வேண்டும் என்ற உன்னத, உயரிய லட்சியத்தை அடைய ஆக்க பூர்வமான நடவடிக்கைகளை உங்கள் சகோதரியின் தலைமையிலான தமிழக அரசு முனைப்புடன் செயல்படுத்தி வருகின்றது. இந்த வேளை தமிழக மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றிட மாநிலத்தில் புதிய சாதனைப் பூக்கள் பூத்துக்குலுங்கி எங்கும் மணம் பரப்பிட உளப்பூர்வமாக உழைக்கின்ற தருமணம் இது.
சீர்மிகு திட்டங்கள் ஏற்றம் பெறவும், ஏழ்மை நிலை அகன்றிடவும் தமிழக அரசால் மேற்கொள்ளப்படும் மக்கள் நலத் திட்டங்களின் பயன்களை உரியவர் அனைவரும் பெற்றிட வேண்டும் என்பதே இந்த இனிய புத்தாண்டில் எனது பேரவா.
ஒன்றுபட்டு நிற்போம்! ஓயாது உழைப்போம்! எந்த நிலையிலும், எந்த வகையிலும் தமிழகத்தின் உரிமைகளை ஒரு போதும் விட்டுத் தர மாட்டோம்! உறுதி கொண்ட உள்ளத்துடன் பொற்காலத் தமிழகத்தை புதிதாய் மீண்டும் படைப்போம்!
இந்த இனிய புத்தாண்டில் எனது அன்புக்குரிய தமிழக மக்கள் அனைவரும் அனைத்து வளங்களும், நலன்களும் பெற்ற மகிழ்ச்சியுடன் வாழ்ந்திட எனது இதயம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்களை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன்," என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications