கேரளாவின் 'உள்ளே வெளியே'- அணை குறித்து ஐவர் குழு முன்பு புலம்பல்!
டெல்லி: முல்லைப் பெரியாறு அணையின் வெளிப்புறம் பலமாகவே உள்ளது. விரிசல் இல்லை, உடைப்பு இல்லை, ஆனால் உள்ளேதான் அணை பலவீனமாக உள்ளது என்று மிக மிக பலவீனமான வாதத்தை நேற்று டெல்லியில் நடந்த ஐவர் குழு முன்பு எடுத்து வைத்தது கேரள அரசு.
முல்லைப் பெரியாறு அணை குறித்து உச்சநீதிமன்றம் நியமித்த ஐவர் குழுவின் ஆலோசனைக் கூட்டம் நேற்று குழுத் தலைவரான நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் முன்னிலையில் நடந்தது.
தமிழகத்தின் சார்பிலும் கேரளாவின் சார்பிலும் நேற்று வக்கீல்கள் வாதம் புரிந்தனர். தமிழகக் குழுவில் வழக்கறிஞர்கள் குரு கிருஷ்ணகுமார், உமாபதி, பொதுப்பணித் துறை செயலாளர் சாய் குமார், தமிழ்நாடு நீர்வளத் துறை ஆணையத்தின் தலைவர் சுப்பிரமணியம், செல்வராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.
கேரளா சார்பில் வழக்கறிஞர்கள் ராஜீவ் தவன், மோகன் கதார்கி, கூடுதல் செயலாளர் ஜெயகுமார், முல்லைப் பெரியாறு சிறப்புக் குழு உறுப்பினர்கள் ஜேம்ஸ் வில்சன், லதிகா ஆகியோர் பங்கேற்றனர்.
கேரள வக்கீல்கள் வாதிடுகையில், அணையில் வெடிப்போ, உடைப்போ இல்லை என்பதை ஒத்துக் கொண்டனர். அவர்கள் கூறுகையில்,
முல்லைப் பெரியாறு பிரச்னைக்குப் புதிய அணை கட்டுவதே ஒரே தீர்வு. அணையில் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டு 999 ஆண்டுக் காலம் அதைப் பாதுகாப்பது இயலாது. பழைய அணை பாதுகாப்பாக உள்ளது என்று அறிவியல் ரீதியாக நிரூபிக்க இயலாது.
பழைய அணையில் வெடிப்பு, உடைப்பு ஏதும் வெளியே காணப்படவில்லை. இருந்தாலும் அணை உள்ளே பலவீனமாக உள்ளது. புதிய அணையைக் கட்டுவது சாத்தியம் என்று முடிவானால் பழைய அணையின் பாதுகாப்பு குறித்து பயப்படத் தேவையில்லை. புதிய அணையைக் கட்ட கேரள அரசுக்கு அனைத்து உரிமையும் உள்ளது. இதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கத் தேவையில்லை.
புதிய அணையைக் கேரள அரசின் நிதியிலிருந்து கட்டுவதால் அதன் முழுக் கட்டுப்பாடு கேரள அரசிடம் இருக்கும் என்றனர்.
இதைத் தொடர்ந்து தமிழக வக்கீல்கள் வாதாடினர். அவர்கள் கூறுகையில்,
முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளதால் புதிய அணை கட்ட வேண்டிய அவசியமே எழவில்லை. அணை பலவீனமாக உள்ளது என்று கேரள அரசு தேவையற்ற வதந்தியைப் பரப்பி வருகிறது. புதிய அணையைக் கட்டுவது தமிழகத்தின் உரிமையைப் பறிக்கும். நில நடுக்கத்தால் அணையில் வெடிப்பு ஏதும் இல்லை என்று கேரள அரசே ஒப்புக் கொண்டுள்ளது. கேரள அரசு குறிப்பிடும்படி அணை வெடித்து சிதறுவதற்கு வாய்ப்பே இல்லை என்று குமார் கூறினார்.
இதையடுத்து நீதிபதி ஆனந்த் கூறுகையில்,
புதிய அணையைக் கட்டினால் அணையின் உரிமை, கட்டுப்பாடு, தண்ணீர்க் கட்டுப்பாடு ஆகிய மூன்று வகை நிர்வாக அதிகாரம் வருகிறது. இதில் புதிய அணைக்கான பாதுகாப்பு, பராமரிப்பு உள்பட இந்த மூன்று வகையான நிர்வாகத்தையும் இரு மாநில அரசுகளும் இணைந்து மேற்கொள்ள தயாரா என்று வரும் வெள்ளிக்கிழமைக்குள் எழுத்துப் பூர்வமாக தாக்கல் செய்ய வேண்டும். அதன் பின்னர் இரு மாநில அரசுகளும் எந்தவித அறிக்கையையும் தாக்கல் செய்ய முடியாது என்றார்.
ஆனால் புதிய அணை கட்டினால் அதை இரு மாநிலங்களும் சேர்ந்து நிர்வகிக்கலாமா என்று நீதிபதி கூறியதற்கு தமிழக வக்கீல்கள் எழுந்து தங்களது திட்டவட்டமான ஆட்சேபனையைத் தெரிவித்தனர்.