புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசு நிவாரணம் வழங்கி துணை நிற்கும்:ஜி.கே. வாசன்
தஞ்சை: தானே புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசு நிவாரணம் வழங்கி துணை நிற்கும் என்று மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவி்த்துள்ளார்.
இது குறித்து அவர் தஞ்சையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
தானே புயலால் தமிழகத்தில் கடலூர், விழுப்புரம், திருவாரூர், நாகை, மாவட்டங்கள் மற்றும் புதுவை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த புயலுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் மொத்தம் 48 பேர் பலியாகியுள்ளனர். இது தவிர நெல், கரும்பு, முந்திரி, வாழை, கடலை, தேக்கு, தென்னை, சவுக்கு, மல்லிகை போன்ற பயிர்கள் சேதமடைந்துள்ளது.
பயிர்கள், தோப்புகள் தவிர குடிசைகள், வீடுகள், மீன்பிடி படகுகள், வலைகள் ஆகியவையும் சேதமடைந்துள்ளதால் மக்கள் அன்றாட வாழ்வை இழந்துள்ளனர். அறுவடைக்கு தயாராக இருந்து நெற்பயிற்கள் நீரில் மூழ்கியுள்ளன. வெள்ளம் சூழ்ந்த வீடுகளை வருவாய் துறை அதிகாரிகள் கணக்கெடுத்து வருகின்றனர். மாநில அரசின் அறிக்கை கிடைத்த பிறகு குழுக்களின் அறிக்கையையும் பார்த்துவிட்டு மத்திய அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கி துணை நிற்கும்.
முல்லைப் பெரியாறு விவகாரத்தி்ல தமிழக அரசு நியாயத்தின் அடிப்படையில் செயல்படுகிறது. இரு மாநில சகோதரத்துவம் பாதிக்கப்படாத வகையில் மத்திய அரசு செயல்படும். நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தான் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும்.
கூடங்குளம் அணுமின் நிலையத் திட்டம் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்திற்கு உகந்தது. மேலும் தமிழகத்தின் மின்தடையைப் போக்க வல்ல திட்டம். எனவே, அப்பகுதி மக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் மத்திய அரசு செயல்படும். நாட்டின் வளர்ச்சிக்கு உகந்த இந்த திட்டம் முழுமை பெற வேண்டும் என்றார்.
அப்போது ஜி.ஆர்.மூப்பனார், ரெங்கராஜன் எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.