கடலூரில் 100% மின்சாரம் வழங்க சீரமைப்பு பணியில் 1,000 இபி ஊழியர்கள்: அமைச்சர் சம்பத்
கடலூர்: புயலால் பாதிக்கப்பட்டுள்ள கடலூர் நகரில் 100 சதவீதம் மின்சாரம் வழங்க 1,000 மின்வாரிய ஊழியர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக அமைச்சர் எம்.சி. சம்பத் தெரிவித்துள்ளார்.
தானே புயலால் கடும் பாதிப்பை சந்தித்துள்ள கடலூர் இயல்பு நிலைக்குத் திரும்ப கடுமையாக போராடி வருகிறது. இன்னும் அங்கு அத்தியாவசியப் பொருட்கள் முறையாக கிடைக்கவில்லை. மின்சாரம் இல்லை, குடிநீர் பிரச்சினையாக உள்ளது. பால் கிடைக்கவில்லை. சாலைகள் மோசமாக சேதமடைந்துள்ளன. இந்நிலையில் கடலூரில் விரைவில் மின்சாரம் வழங்க சீரமைப்பு பணி ஒழுங்காக நடக்கிறதா என்று அமைச்சர் எம்.சி. சம்பத் நேற்று நேரில் ஆய்வு செய்தார். அதன் பிறகு நத்தப்பட்டு துணை மின் நிலையத்திற்கு சென்றார்.
மின்கம்பங்கள் சீரமைக்கப்பட்ட பிறகு மின்சாரம் வழங்கினால் ஏதாவது பிரச்சனை வருமா என்றெல்லாம் அவர் ஆய்வு செய்தார். அதன் பிறகு கேப்பர்மலை, செம்மங்குப்பம் ஆகிய பகுதியில் உள்ள துணை மின் நிலையங்களுக்கும் நேரில் சென்று ஆய்வு செய்தார். கடலூரில் மின்கம்பங்கள் சீரமைக்கும் பணியை அவர் பார்வையிட்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
புயல் பாதித்த பகுதிகளில் முழுவீச்சில் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. கடலூர் நகரில் 100 சதவீத மின்சாரம் வழங்க 1,000 மின்வாரிய ஊழியர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முதன்மை பொறியாளர் தலைமையில் மின்வாரிய அதிகாரிகளும் கடலூரில் தங்கி சீரமைப்பு பணிகளை கண்காணித்து வருகின்றனர் என்றார்.
அப்போது அவருடன் வெள்ள நிவாரண சிறப்பு அதிகாரி அபூர்வா, மின்சார வாரிய முதன்மை பொறியாளர், நகரபை தலைவர் சி.கே.சுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, நகர செயலாளர் குமார் என்கிற குமரன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.