காரைக்குடி 100 அடி ரோட்டில் பறந்த ரூ.100, 500, 1000 நோட்டுகள்!
காரைக்குடி பெரியார் சிலை அருகே உள்ளது 100 அடி ரோடு. எப்பொழுதும் பரபரபப்பாகக் காணப்படும் அந்த ரோட்டில் நேற்று காலை 10 மணி அளவில் யாரும் எதிர்பாராவிதமாக ரூ.100, ரூ.500, ரூ.1000 நோட்டுகள் பறந்தன. இதையடுத்து அப்பகுதியில் சிங்கப்பூர் ஷாப்பிங் சென்டர் நடத்தி வரும் கணேசன் மற்றும் ராஜா ஆகியோர் அந்த நோட்டுகளை சேகரித்தனர். அதன் பிறகு அவ்வழியாகச் சென்றவர்களிடம் அந்த நோட்டுகள் யாருடையது என்று விசாரித்தனர். ஆனால் யாரும் நோட்டுக்கு உரிமை கோரவில்லை.
இந்நிலையில் சேகரித்த நோட்டை எண்ணிப் பார்த்தபோது ரூ.12,500 இருந்தது. யாராவது பைக்கில் சென்றவர்கள் போகிற வேகத்தில் நோட்டை தவற விட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இதையடுத்து கணேசனும், ராஜாவும் அந்நோட்டுகளை காரைக்குடி வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமாரிடம் ஒப்படைத்தனர். பணத்தை பொறுப்பாக போலீசில் ஒப்படைத்த அவர்களை சப்-இன்ஸ்பெக்டர் பாராட்டினார். பணம் யாருடையது என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பரபரப்பான ரோட்டில் பண மழை பெய்தததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.