புயல் பாதிப்புகளை மதிப்பீடு செய்ய மத்திய அரசுக் குழு வர வேண்டும்: சீமான்
சென்னை: தமிழகம், புதுச்சேரியை புரட்டிப் போட்ட 'தானே' புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை மதிப்பீடு செய்ய மத்திய அரசுக் குழு வர வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
வங்கக் கடலில் உருவான ‘தானே’ புயல் கடந்த வியாழக்கிழமை கரையைக் கடந்தபோது தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் வரலாறு காணாத பாதிப்பையும், உயிரிழப்பையும் ஏற்படுத்தியது. 'தானே' புயல் மழைக்கு 49 பேர் பலியாகியுள்ளனர். உயிரிழந்த மக்கள் அனைவரும் குடிசைகளிலும், மண் வீடுகளிலும் வாழ்ந்த ஏழை, எளிய மக்கள் ஆவர்.
இந்தப் புயலால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களான கடலூர், சிதம்பரம், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், உள்மாவட்டங்களான விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
புயலால் குறிப்பாக விவசாயிகளுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. புயலால் வாழை, தென்னை, மாமரங்களும், முந்திரிச் செடிகளும் வேரோடு பிடிங்கி எறியப்பட்டுள்ளது. புயலால் மரங்கள் சாலைகளில் விழுந்து கிடப்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் மக்களுக்கு கிடைக்கவில்லை.
அறுவடைக்கு காத்திருந்த நெற்பயிர்கள் மழையால் ஏற்பட்ட நீர்பெருக்கில் மூழ்கியுள்ளன. மழை நின்று 5 நாட்களாகியும் நீர் வடியாததால் நெற்பயிர்கள் அழுகிப் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையை மாற்றிட போர்க்கால அடிப்படையில் மரங்களை அகற்றும் பணிகளை மாநில அரசு முடுக்கிவிட வேண்டும்.
மழை, புயலால் மேற்கண்ட மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள இழப்பு ரூ.5,000 கோடிக்கு மேல் இருக்கும் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்தினர் மழை, புயலால் ஏற்பட்ட இழப்பு குறித்த விவரங்களை எடுத்து வந்தாலும், அதன் அடிப்படையில் மாநில அரசு கேட்கும் நிவாரணத்தை மத்திய அரசு வழங்கப் போவதில்லை.
எனவே புயல், மழையால் ஏற்பட்டுள்ள இழப்பை மதிப்பீடு செய்ய மத்திய அரசுக் குழு உடனடியாக தமிழகத்திற்கு வர வேண்டும். தானே புயலால் ஏற்பட்ட பாதிப்பையும், இழப்பையும் பேரழிவு என்று மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.
ஏனெனில் தமிழகத்தை தாக்கிய தானே புயல் கரையைக் கடக்கும்போது 145 கி.மீ. வேகத்தில் காற்று அடித்துள்ளது. அதனால் தான் இந்த அளவி்ற்கு உயிரிழப்பும், சேதாரமும் ஏற்பட்டுள்ளது.
மீனவர் பிரச்சனை, கூடங்குளம் அணுமின் நிலையம், முல்லைப் பெரியாறு உள்ளிட்ட பிரச்சனைகளில் தமிழகத்தை வஞ்சித்து வருவது போல் இந்த பிரச்சனையில் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்காமல், நேர்மையாக நடந்து கொண்டு உரிய இழப்பை மதிப்பீடு செய்து வழங்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.