இன்போசிஸ் வருவாய் அதிகரிப்பு-ஆனால், வருங்காலம் கஷ்டம் என்கிறது!
கிட்டத்தட்ட 25 சதவீதம் அதிகமாகவே லாபம் ஈட்டியிருந்தாலும், இதற்கு முக்கிய காரணம் ரூபாயின் மதிப்பு சரிந்ததே ஆகும்.
இந் நிலையில், ஐரோப்பாவில் நிலவும் பொருளாதார சிக்கல்களால் மார்ச் வரையிலான அடுத்த காலாண்டில் நிறுவனத்தின் லாபம் குறையலாம் என்றும் இன்போசிஸ் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா, ஐரோப்பாவில் தான் இன்போசிஸ் நிறுவனத்தின் பெரும்பாலான சேவைகள் வழங்கப்படுகின்றன. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 8 சதவீதம் அளவுக்கு சரிந்ததால், அமெரிக்காவில் இன்போசிஸ் ஈட்டும் ஒவ்வொரு டாலருக்கும் இந்தியாவில் 8 ரூபாய் வரை அதிகம் கிடைக்கிறது. இதனால் தான் அந்த நிறுவனம் அதிக லாபத்தை ஈட்ட முடிந்துள்ளது. (அதாவது ஒரு டாலருக்கு 44 ரூபாய் என்ற நிலையில் இருந்த இந்திய கரன்சியின் மதிப்பு இப்போது ரூ. 52 ஆகிவிட்டது. இது தான் ரூபாய் மதிப்பு சரிவு).
டிசம்பர் வரையிலான காலாண்டின் இந்த நிறுவனத்தின் வருவாய் ரூ. 9,298 கோடியாகும். இது கடந்த காலாண்டில் ரூ. 8,099 கோடியாக இருந்தது.
நிறுவனத்தின் செயல் இயக்குனர் சிபு லால் இன்று காலாண்டு முடிவுகளை வெளியிட்டு நிருபர்களிடம் பேசுகையில், கடந்த நவம்பர் முதலே எங்களது நிறுவன சேவையை பயன்படுத்தும் பல நாட்டு நிறுவனங்களும் சாப்ட்வேர், தொழில்நுட்பத்துக்காக செலவிடுவதை குறைக்க ஆரம்பித்துவிட்டன. இதனால் அடுத்த காலாண்டில் லாபம் குறையலாம் என்றார்.
இந் நிலையில் இன்போசிஸ் நிறுவனத்தின் பங்குகள் இன்று 7 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்தன. ரூ. 207 வரை சரிவைக் கண்ட இந்த பங்குகள் ரூ. 2,,619க்கு விற்பனையாயின.