தானே புயல் தாண்டவத்திற்கு 3700 கி.மீ சாலைகள் சேதம்-சீரமைப்பு தொடங்கியது
சென்னை: தானே புயலினால் தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் 3,700 கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலைகள் சேதமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உயிர்சேதம் அதிகம் இல்லையென்றாலும் பயிர்சேதம் மக்களின் வாழ்வாதாரத்தை புரட்டிப் போட்டுள்ளது.
தானே புயல் கடலூருக்கும், புதுச்சேரிக்கும் இடையே டிசம்பர் 30-ந் தேதி கரையை கடந்தது. இதனால் கடலூர் மாவட்டத்தில் மட்டும் லட்சக்கணக்கான ஏக்கரில் பயிரிட்டப்பட்டிருந்த நெல், நிலக்கடலை, கரும்பு, வாழை உள்பட பல பயிர்களும், தென்னை, முந்திரி, மா, பலா உள்ளிட்ட மரங்களும் கடுமையாக சேதமடைந்துள்ளன.
மின் விநியோகம் இல்லை
பல்லாயிரக்கணக்கான மின்கம்பங்கள் சாய்ந்ததால் மின் வினியோகம் இன்னமும் முழுமையாக சீரடையவில்லை. குடியிருந்த குடிசைகள் காணாமல் போனதால் பொதுமக்கள் பலரும் பள்ளிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த புயலுக்கு 57 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிர்சேதம் அதிகம் இல்லையென்றாலும் பயிர்சேதம் மக்களின் வாழ்வாதாரத்தை புரட்டிப் போட்டுள்ளது.
9 மாவட்டங்களில் சாலைகள் சேதம்
புயல் தாக்கியது கடலூரைத்தான் என்றாலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், விழுப்புரம், கடலூர், தஞ்சை, நாகப்பட்டினம், திருவாரூர், ராமநாதபுரம் ஆகிய 9 மாவட்டங்களில் 3,700 கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலைகள் சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் மட்டும் 1,300 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலைகள் சேதமடைந்துள்ளன. 4 பெரிய பாலங்களும், 87 சிறிய பாலங்களும் சேதமடைந்துவிட்டன.
ரூ.150 கோடி ஒதுக்கீடு
பாதிக்கப்பட்ட சாலைகளை தற்காலிகமாக சீரமைக்க ரூ.200 கோடியும், நிரந்தரமாக சீரமைக்க ரூ.496 கோடியும் ஒதுக்க வேண்டும் என்று தமிழக அரசிடம் நெடுஞ்சாலைத்துறை கோரியது. இதில், தற்காலிக சீரமைப்பு பணிக்காக மட்டும் ரூ.150 கோடியை நெடுஞ்சாலைத்துறைக்கு முதலமைச்சர் ஜெயலலிதா ஒதுக்கியுள்ளார். சாலை சீரமைப்பு பணிகள் 15 முதல் 30 நாட்களில் முடிவடையும் என்று அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்