ஓய்ந்தது வடகிழக்குப் பருவமழை; சில இடங்களில் மழை பெய்யலாம்-வானிலை மையம்
சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காலம் முடிவடைந்து விட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் முறைப்படி தெரிவித்துள்ளது.
இருப்பினும் வான்வெளியில் மேல்அடுக்கில் காற்றின் போக்கு சாதகமாக இருப்பதால் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக ஆய்வு மையம் கூறியுள்ளது.
மார்கழிக்குப் பின் மழை இல்லை என்பார்கள். இப்போது மார்கழி மாதமும் முடியப் போகிறது. இந்த நிலையில் மழையும் நின்று விட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை டிசம்பர் 15-க்கு பிறகு அதிகமாக பெய்வதில்லை. புயலும் வருவதில்லை. ஆனால் இந்த ஆண்டு தானே புயல் டிசம்பர் 30-ந் தேதியன்று வந்து கடலூருக்கும், புதுச்சேரிக்கும் இடையே கரையை கடந்ததால் பலத்த சேதத்தை அந்த பகுதிகளில் பலத்த சேதத்தை ஏற்படுத்தி விட்டது.
சென்னையில் திடீர் மழை
இந்த நிலையில் புதன்கிழமையன்று சென்னையில் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. மயிலாப்பூர், நுங்கம்பாக்கம், தாம்பரம் உள்ளிட்ட ஒரு சில இடங்களில் மழையும் பெய்தது.
இந்த திடீர் மழை குறித்து சென்னை வானிலை ஆராய்ச்சி மண்டல இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் கூறியதாவது,
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை முடிந்துவிட்டது. இப்போதைக்கு புயலோ பெரும் மழையோ வருவதற்கு வாய்ப்பில்லை.
இருப்பினும் வான்வெளியில் மேல்அடுக்கில் காற்றின் போக்கு சாதகமாக இருப்பதால் தமிழ்நாட்டில் சில இடங்களில் மழை பெய்துள்ளது. 12-ந் தேதி தமிழ்நாட்டின் உள்மாவட்டங்களில் சில இடங்களிலும் கடலோர மாவட்டங்களில் சில இடங்களிலும் மழை பெய்யும் என்றார்.
மழைக்காலம் முடிந்து விட்டதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளால் அடுத்த சில மாதங்களில் வரப் போகும் வெயில் காலத்தை நினைத்து மக்கள் இப்போதே வியர்த்து விறுவிறுக்கத் தொடங்கி விட்டனர்.