சீமானின் நாம் தமிழர் கட்சியிலிருந்து வேல்முருகனிடம் தாவினார் பேராசிரியர் தீரன்
சென்னை: நாம் தமிழர் கட்சியில் செயல்பட்டு வந்த முன்னாள் பாமக முக்கியத் தலைவர் பேராசிரியர் தீரன் தன்னுடன் வந்து இணைந்துள்ளதாக பண்ருட்டி வேல்முருகன் கூறியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தை 1-ம் தேதி பொங்கல் தினத்தில் சென்னையில் புதிய கட்சியை தொடங்க இருக்கிறேன். இந்த கட்சியின் கொள்கை, கொடி, நிர்வாகிகள் குறித்து அன்றைய தினம் அறிவிக்கப்படும்.
நாம் தமிழர் கட்சியில் இருந்து பேராசிரியர் தீரன் எங்களுடன் இணைந்து இருக்கிறார். அவரைப் போல பா.ம.க.வில் இருந்து இன்னும் ஏராளமானவர்கள் எங்களுடன் கைகோர்க்க உள்ளனர் என்றார் வேல்முருகன்.
ஆரம்பத்தில் பாமகவில் முக்கியப் பொறுப்பில், டாக்டர் ராமதாஸுக்கு நெருக்கமானவராக இருந்தவர் தீரன். பின்னர் ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி ஆகியோரின் கைகள் வலுத்த பிறகு தீரன் ஒதுக்கப்பட்டார், ஓரம் கட்டப்பட்டார். இதனால் பாமகவை விட்டு வெளியேறி விட்டார்.
ஈழப் பிரச்சினையின்போது தீவிரமாக செயல்பட்டவர் தீரன். பல்வேறு ஆக்கப்பூர்வமான பேச்சுக்களையும், யோசனைகளையும் தெரிவித்து வந்தார். பின்னர் சீமானுடன் இணைந்து செயல்பட்டார். தற்போது வேல்முருகனுடன் அவர் கை கோர்ப்பதால் அவரைப் போல மேலும் பலர் வேல்முருகனுடன் இணையும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.