பெரும் நெருக்கடிக்கு மத்தியில் துபாய்க்குக் கிளம்பிச் சென்றார் சர்தாரி
பாகிஸ்தான் அரசியலை தனது கைக்குள் வைத்துள்ள மகா சக்தி வாய்ந்த ராணுவத்திற்கும், மெகா பலவீனமான பாகிஸ்தான் அரசுக்கும் இடையே பெரும் மோதல் வெடித்துள்ளது.நாட்டில் ராணுவப் புரட்சி வெடிக்கும் என்ற அச்சம் நிலவுகிறது. மறுபக்கம் சர்தாரிக்கு எதிராகவும் போராட்டங்கள் வெடித்துள்ளன. உடனடியாக சர்தாரியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரரும், அரசியல்வாதியுமான இம்ரான் கான் வலியுறுத்தியுள்ளார். சர்தாரிக்கு எதிராக போராட்டங்களும் வெடித்துள்ளன.
இந்த நிலையில் சர்தாரி திடீரென துபாய் கிளம்பிச் சென்றார். கடந்த மாதமும் இதே போலத்தான் அவர் துபாய் போயிருந்தார். அப்போது அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவித்தன. ஆனால் தற்போது அவர் போயிருப்பது ராணுவப் புரட்சி நடந்தால் அதில் தான் சிக்கி விடக் கூடாது என்பதற்காக என்று பேச்சு அடிபடுகிறது.
ஆனால் துபாயில் நடைபெறும் கல்யாண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சர்தாரி போயுள்ளாகவும், வெள்ளிக்கிழமை காலை அவர் பாகிஸ்தான் திரும்புவார் எனவும் அவரது வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் யாருக்குக் கல்யாணம் என்பது குறித்து அவர்கள் தெரிவிக்க மறுத்து விட்டனர்.
இதற்கிடையே, புரட்சி நடத்தி ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கில் ராணுவத் தலைமைத் தளபதி கயானி இல்லை என்று புதிய தகவல் கூறுகிறது. அதேசமயம், சட்டப்பூர்வமாக பாகிஸ்தான் அரசை, அந்த நாட்டு சுப்ரீம் கோர்ட்டே நீக்க வழி வகை செய்ய அவர் விரும்புவதாக கூறப்படுகிறது.
கடந்த 2008ம் ஆண்டு சர்தாரியின் கட்சி பெரும் வெற்றி பெற்று பாகிஸ்தானில் ஆட்சியைப் பிடித்தது. கிலானி பிரதமராக நியமிக்கப்பட்டார். இந்த ஆட்சி அடுத்த ஆண்டு முடிவுக்கு வருகிறது. அப்போது நாடாளுமன்றத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால் தற்போதைய நிலையைப் பார்த்தால் சீக்கிரமே வந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெரும் எதிர்பார்ப்புகளுடன் சர்தாரி கையில் மக்கள் ஆட்சியைக் கொடுத்தனர். ஆனால் மிகப் பெரிய அளவில் ஊழல்கள், திறமையற்ற ஆட்சி, கோமாளித்தனமான அரசு நிர்வாகம், வறுமை என பாகிஸ்தானை பெரும் நெருக்கடிக்குள்ளாக்கி விட்டது சர்தாரி-கிலானி அரசு என்று அந்த நாட்டு எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம் சாட்டுகின்றன.