பாகிஸ்தானுக்கு தேவையானது ஜனநாயகமா, சர்வாதிகாரமா?-நாடாளுமன்றம் தீர்மானிக்கட்டும்: கிலானி
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானுக்கு தேவையானது ஜனநாயகமாக அல்லது சர்வாதிகாரமா என்பதை நாடாளுமன்றமே தீர்மானிக்கட்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸா கிலானி கூறியுள்ளார்.
பாகிஸ்தானில் நிலவி வரும் பெரும் நெருக்கடிக்கு மத்தியில் இன்று நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு கிலானி பேசுகையில், நம்பிக்கை வாக்கெடுப்பு கோர வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. இந்த நாட்டுக்குத் தேவையானது சர்வாதிகாரமா அல்லது ஜனநாயகமா என்பதை நாடாளுமன்றமே முடிவு செய்யட்டும்.
நாங்கள் யாருக்கும் எதிரானவர்கள் அல்ல. அரசியல் சாசனச் சட்டத்தை அனைவரும் மதிக்க வேண்டும். அதை யாரும் மீறி நடக்க கூடாது, முடியாது.
யாருடைய ஆதரவைப் பெறுவதற்காகவும் நாங்கள் இங்கு வரவில்லை. நாட்டுக்கு எது தேவை என்பது நாடாளுமன்றத்திற்குத் தெரியும். இங்குள்ளவர்களுக்குத் தெரியும்.
நாங்கள் வெளியேறினால் நீங்களும் வெளியேறித்தான் ஆக வேண்டும். எல்லோருமே வெளியேறியாக வேண்டும்.
நாம் அரசியல்வாதிள்.தவறு நடக்கத்தான் செய்யும். அரசியல்வாதிகள் தவறு செய்யாவிட்டால் பிறகு யார் செய்வார்கள்.? ஆனால் நமது தவறுகளால் ஜனநாயகம் பாதிக்கப்பட்டு விடக் கூடாது என்றார் கிலானி.