உ.பி. தேர்தல் களம்: 'கொல வெறி' பிடிக்க வைக்க காங். ஏற்பாடு

தனுஷ், ஸ்ருதி ஹாசனின் 3 படத்தில் உள்ள கொல வெறிப் பாடல் உலகப் புகழ் பெற்றுள்ளது. சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த பாடலைத் தான் முணுமுணுக்கின்றனர். அதிலும் வாண்டுகள் எப்பொழுது பார்த்தாலும் கொல வெறி, கொல வெறின்னு தான் பாடிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இந்த பாடலை உத்தர பிரதேச தேர்தல் பிரச்சாரத்தின்போது பயன்படுத்த காங்கிரஸ் கட்சி தீர்மானித்துள்ளது.
இதையடுத்து இந்த பாடலின் உரிமையைப் பெற நடிகர் தனுஷுடன் காங்கிரஸார் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் இந்தி பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டன. உரிமையைக் கொடுக்க முதலில் தனுஷ் மறுத்ததாகவும் அதன் பிறகு ராஜ்பாபர் எம்.பி. பேசி அவரை சம்மதிக்க வைத்ததாகவும் செய்திகள் வெளியாகின.
இது குறித்து தனுஷிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது,
பாடல் உரிமையை வாங்கும் முயற்சி நடப்பது பற்றி எனக்கு தெரியாது. அந்த பாடலின் உரிமை சோனி நிறுவனத்திடம் உள்ளது. ஒரு வேளை அந்நிறுவனத்தாரிடம் பேசினார்களா என்று எனக்கு தெரியாது என்றார்.
உங்கள் பட பாடலை அரசியல் கட்சிகள் பயன்படுத்துவதில் உங்களுக்கு ஆட்சேபனை இல்லையா என்று கேட்டதற்கு அது அரசியல் பாட்டே அல்ல என்றார்.
காங்கிரஸ் கொல வெறிப் பாடலின் வார்த்தைகளை மாற்றி நல்லாட்சி, மதச்சார்பின்மை ஆகிய விஷயங்களை வலியுறுத்தவிருக்கின்றது. அக்கட்சி நாடாளுமன்ற தேர்தலின்போது ஏ.ஆர்.ரஹ்மானின் ஜெய்ஹோ பாடலை பயன்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications