மீன்பிடி தொழில்: விரைவில் இந்தியா-இலங்கை புதிய ஒப்பந்தம்
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா இலங்கை சென்றுள்ள நிலையில், இலங்கை வெளியுறவுத்துறை வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்களின் பாதுகாப்பு, கடல்வளத்தை நீடித்திருக்கச் செய்வது, கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வாழ்வாதாரம் போன்ற அம்சங்களை இந்த உடன்பாடு கவனத்தில் கொள்ளும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி பாக் ஜலசந்தி, மன்னார் வளைகுடா போன்ற பகுதிகளில் மீன்பிடிப்பதற்கு இந்திய மீனவர்களுக்கு இருக்கும் பாரம்பரிய உரிமை தொடர்பான கோரிக்கையைக் கைவிடுவதற்கு இந்தியா ஒப்புக் கொண்டிருப்பதாக இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் ரஜிதா சேனரத்ன பேட்டியளித்திருந்தார்.
இந் நிலையில் இதற்கு விளக்கமளித்து இலங்கை வெளியுறவுத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில்,
மீன்பிடித்தல் தொடர்பாக இரு தரப்பு கூட்டு நடவடிக்கைக் குழுவின் 4வது கூட்டம் கடந்த 13, 14ம் தேதிகளில் நடந்தது. அதில் பாரம்பரிய மீன்பிடி உரிமை போன்றவற்றில் இந்தியாவும் இலங்கையும் தத்தமது நிலையைத் தொடர்ந்து வலியுறுத்தின.
அதே நேரத்தில் இரு நாட்டு மீனவர்களும் பாதுகாப்பாக மீன்பிடி தொழிலைச் செய்வதற்கான ஒத்துழைப்புகளை மேம்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை தங்களது அரசுகள் எடுக்க விரும்புவதாக இரு தரப்பினரும் தெரிவித்தனர்.
இந்த விஷயத்தில் பாதுகாப்பு, கடல்வளம், கடல் சுற்றுச்சூழல், வாழ்வாதாரம் போன்றவற்றைக் கணக்கில் எடுத்துக் கொள்ளும் ஒருமுகப்படுத்தப்பட்ட ஒரு தீர்வை எட்டும் வகையில் தொடர்ந்து பேசுவதற்கு இருதரப்பும் ஒப்புக் கொண்டிருக்கின்றன.
இதன் தொடர்ச்சியாக, மீன் பிடி தொழிலில் ஒத்துழைப்பு மற்றும் மேம்பாடு தொடர்பான ஒப்பந்தத்தை மிக விரைவில் செய்து கொள்ளவும் இருதரப்பும் சம்மதித்திருக்கின்றன.
கடலின் தரைப்பகுதிவரை வலைவீசி மீன்பிடிக்கும் நவீன முறையை மீனவர்கள் பயன்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு இந்தியா ஒப்புக் கொண்டிருக்கிறது.
இவ்வாறு அந்த கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.