15 நாட்களாக குடிநீர் விநியோகம் இல்லை - சாலை மறியலில் இறங்கிய பொது மக்கள்
வேலூர்: வேலூரில் கடந்த 15 நாட்களாக குடிநீர் கிடைக்காததால் ஆவேசம் அடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வேலூர் தொரப்பாடியை அடுத்த கே.கே.நகர் மேட்டுப்பாறை பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவைக்காக அப்பகுதியில் சின் டெக்ஸ் டேங்க் வசதியுடன் ஆழ்துளை கிணறு உள்ளது. இந்த சின்டெக்ஸ் டேங்கின் மின் மோட்டார் வயர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு எரிந்துவிட்டதாகக் கூறப்படுகின்றது.
இதனால் இதனை மாற்றுமாறு மின் வாரியத்துக்கு பொதுமக்கள் புகார் கொடுத்தனர். ஆனால் மின் மோட்டார் வயர் இணைப்பை சரி செய்யவில்லை. இதனால் கடந்த 15 நாட்களாக பொதுமக்கள் தண்ணீர் இல்லாமல் சிரமப்பட்டு வந்தனர்.
இதனால் ஆத்திரமைடந்த பொதுமக்கள் தொரப்பாடி சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இது குறித்த தகவல் அறிந்த பாகாயம் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி, போலீசார் உடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொது மக்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். இதனையடுத்து மறியலில் ஈடுபட்ட பொது மக்கள் கலைந்து சென்றனர். பொதுமக்களின் திடீர் மறியலால் தொரப்பாடி- வேலூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications