ஆன்லைன் வர்த்தகம்: மூடப்படும் நகை பட்டறைகள்-5,000 தொழிலாளர்கள் வேலை இழப்பு
நெல்லை: ஆன்லைன வர்த்தகத்தால் நகை பட்டறைகள் மூடப்பட்டு வருகின்றன. இதனால் நெல்லையில் மட்டும் 5,000 தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.
தச்சு தொழில், சிற்பம், பாத்திரம் செய்தல், நகை, கொல்லு தொழில் என ஐந்தொழில் செய்யும் சமுதாயத்தினர் ஒரு காலத்தில் அந்தஸ்து பெற்றவர்களாக இருந்தனர். குறிப்பாக நகை தொழில் என்பது குலத்தொழிலாக இருந்து வந்தது. தங்கம், வெள்ளி, வைர நகைகளை தயாரித்து விற்பனை செய்து வந்த அவர்கள் அரசாங்கத்திடம் முறைப்படி உரிமம் பெற்றிருந்தனர். மாவட்டம் தோறும் ஏராளமான நகை பட்டறைகள் இருந்தன. இவற்றில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்தனர்.
தங்கக்கட்டுபாடு சட்டம் கொண்டு வரப்பட்டது முதல் நகை தொழில் நலிவடையத் தொடங்கியது. தங்கத்தின் மீதுள்ள மோகத்தால் அதை வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்ததால் ரெடிமேட் நகைகள் வரத் துவங்கின. வசதி படைத்தவர்கள் சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளில் இருந்து இயந்திரங்கள் மூலம் தயார் செய்த ரெடிமேட் நகைகளை வாங்கி விற்பனை செய்தனர். இதனால் வசதி படைத்த மற்ற சமுதாயத்தினரும் இத்தொழிலில் ஈடுபட்டனர்.
இந்தியாவில் பெரிய நகைக் கடைகள் தோன்றின. புதிய டிசைன்களில் நகைகள், செய்கூலி, சேதாரம் கிடையாது, நகை சேமிப்பு திட்டம் போன்ற கவர்ச்சிகரமான அறிவிப்புகளால் மக்கள் பெரிய கடைகளை நோக்கி படையெடுக்கத் தொடங்கினர். இதனால் பல இடங்களில் நகை பட்டறைகள் மூடப்பட்டன. தொழில் போட்டியை சமாளிக்க கோவை, திருப்பூர் போன்ற பகுதிகளில் ஒரு சில வியாபாரிகள் வங்கிகளில் கடன் பெற்று டையிங் மெஷின் நாங்கி நகைகளை டிசைன் செய்தனர். ஆனால் வெளி்நாட்டு வியாபாரிகளுடன் அவர்களால் போட்டி போட முடியவில்லை. வெளிநாட்டு இயந்திர நகை உற்பத்தியால் லட்சக்கணக்கான நகை தொழிலாளர்கள் பாதிப்படைந்தனர். மேலும் ஆன்லைன் வர்த்தகம் புகுந்ததால் நகை தொழில் மிகவும் நலிந்தது.
நெல்லையில் டவுன் கூலக்கடை பஜார், அக்கச்சாலை விநாயகர் கோவில் தெரு, தென்னம்பிள்ளை தெரு, சங்கரோஜித் பண்டிதர் தெரு, மேலரதவீதி, பர்வதராஜசிங்க தெரு போன்ற பகுதிகளில் ஏராளமான நகை பட்டறைகள் உள்ளன. இங்கு 10,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்தனர். இதுதவிர பாளையங்கோட்டை, தென்காசி, சங்கரன்கோவில் போன்ற பகுதிகளில் ஆயிரக்கணக்கான நகை பட்டறைகள் உள்ளன. ஆன்லைன் வர்த்தகத்தால் இங்கு வேலை பார்க்கும் 5,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications