எஸ்.எம். கிருஷ்ணாவுக்கு எதிரான விசராணைக்கு உச்ச நீதிமன்றம் தடை
டெல்லி: கர்நாடக லோக்ஆயுக்தா போலீசார் தனக்கு எதிராக பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையை எதிர்த்து வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு எதிராக விசாரணை நடத்த தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
1999-2004 காலகட்டத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா கர்நாடக முதல்வராக இருந்தார். அப்போது அவர் சுரங்கம் தோன்றுவதற்காக வனத்துறை நிலங்களை தனியார் நிறுவனங்களுக்கு சட்டவிரோதமாகக் கொடுத்துள்ளார் என்றும், தனது குடும்பத்தார், நண்பர்கள் பெயரில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளார் என்றும் பெங்களூரைச் சேர்ந்த தொழில் அதிபர் ஆபிரகாம் என்பவர் போலீசில் புகார் கொடுத்தார்.
இதையடு்தது எஸ்.எம். கிருஷ்ணாவுக்கு எதிராக அம்மாநில லோக்ஆயுக்தா போலீசார் கடந்த டிசம்பர் மாதம் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர். இதை எதிர்த்து அவர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் அவர் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய உத்தரவிட அந்நீதிமன்றம் மறுத்தது.
இதைத் தொடர்ந்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். நிலம் வழங்கப்பட்டது அமைச்சர்கள் குழுவின் முடிவே தவிர தனிப்பட்ட நபரின் முடிவாக நீதிமன்றம் கருதக்கூடாது என்று அவர் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் கபீர், சுரிந்தர் சிங் நிஜ்ஜார் மற்றும் கியான் சுதா மிஸ்ரா ஆகியோர் முன்பு இன்று பிற்பகலில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருஷ்ணாவுக்கு எதிராக விசாரணை நடத்த தடைவிதித்து உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications