15 புதிய பாலங்கள் வீடியோ கான்பரன்சிங் முறையில் திறப்பு
சென்னை : வண்டலூர்-வாலாஜாபாத் சாலையில் உள்ள பாலம் உள்ளிட்ட 15 புதிய பாலங்களை முதல்வர் ஜெயலலிதா வெள்ளிக்கிழமையன்று வீடியோ கான்பரன்சிங் முறையில் திறந்து வைத்தார். இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,
காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலூர் ரயில் நிலையம் அருகில் வண்டலூர்-வாலாஜாபாத் சாலையில் உள்ள ரயில்வே கடவுக்கு மாற்றாக ரூ.27 கோடி செலவில் 1,480 மீட்டர் நீளமுள்ள சாலை மேம்பாலம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதற்காக தமிழக அரசு ரூ.22 கோடியும், ரயில்வே துறை ரூ.5 கோடியும் செலவிட்டது. ரூ.27 கோடி மதிப்பில் கட்டப்பட்ட வண்டலூர் மேம்பாலத்தை தலைமைச் செயலகத்தில் இருந்து விடியோ கான்பரன்சிங் முறை மூலம் திறந்து வைத்தார்.
இதேபோல் போக்குவரத்து மேம்பாட்டுக்காக விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் கோவிந்தசாமி கலைக் கல்லூரி சாலையில் ரூ.11.50 கோடி மதிப்பில் சாலை மேம்பாலம், திருவாரூர் மாவட்டம் திட்டை தாராசுரம் சாலையில் கள்ளான் ஆற்றில் ரூ.1.61 கோடியில் உயர்நிலை பாலம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சேலம்-திருப்பத்தூர்-வாணியம்பாடி சாலையில் அனுமன்தீர்த்தத்தில் தென் பெண்ணை ஆற்றின் குறுக்கே ரூ.6 கோடியில் உயர்நிலை பாலம், கோவை மாவட்டம் செந்தேவிபாளையம் அருகில் கரிசல்காட்டு பள்ளம் ஆற்றின் குறுக்கே ரூ.1.15 கோடியில் பாலம், மதுரை மாவட்டத்தில் வீரபாண்டி அருகில் உபரிநீர் வாய்க்கால் குறுக்கே ரூ.85 லட்சம் மதிப்பில் பாலம், பெரம்பலூர் மாவட்டத்தில் துங்கபுரம் அருகில் வீரமுத்திரவாரி ஆற்றின் குறுக்கே ரூ.84 லட்சம் மதிப்பில் பாலம், கொளத்தூர் அருகே காட்டாற்றின் குறுக்கே ரூ.72 லட்சம் மதிப்பில் பாலம் என தமிழ்நாடு முழுவதும் ரூ.46.78 கோடியில் கட்டப்பட்டுள்ள 15 புதிய பாலங்களை முதல்வர் ஜெயலலிதா வீடியோ கான்பரன்சிங் முறையில் திறந்து வைத்தார்.