தானே புயல் நிவாரணம்: ஒரே நாளில் ரூ.28 கோடி நிதி - எம்ஏஎம் ராமசாமி ரூ1 கோடி வழங்கினார்!
அரசுத் துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், கலைஞர்கள் இந்தத் தொகையை முன்வந்து அளித்தனர்.
நேற்று நிதி உதவி வழங்கியவர்கள்:
தமிழ்நாடு மின் உற்பத்தி மின் பகிர்மான கழகம், தமிழ்நாடு மின்தொடர் அமைப்பு கழகம் மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பாக,. மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் நத்தம் ஆர்.விஸ்வநாதன் ரூ.8 கோடி மற்றும் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் சார்பாக ரூ.7 கோடி என மொத்தம் ரூ.15 கோடி வழங்கினார்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.பி.முனுசாமி நகராட்சி நிர்வாகத்தின் சார்பாக ரூ.3 கோடியே 33 லட்சத்து 6 ஆயிரத்து 142 மற்றும் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பாக ரூ.1 கோடியே 65 லட்சத்து 7 ஆயிரத்து 37 என மொத்தம் ரூ.4 கோடியே 98 லட்சத்து 13 ஆயிரத்து 179 வழங்கினார்.
கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு கூட்டுறவுத்துறை மற்றும் கூட்டுறவுத்துறை நிறுவன ஊழியர்களின் ஒரு நாள் சம்பளம் ரூ.5 கோடியே 59 லட்சம் வழங்கினார்.
கோயம்புத்தூர் மாநகராட்சி ஊழியர்களின் ஒரு நாள் ஊதியம் மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சி மேயர் செ.ம.வேலுச்சாமியின் சொந்த பங்களிப்பான ரூ.5 லட்சமும் சேர்த்து, மொத்தம் ரூ.27 லட்சத்து 44 ஆயிரத்து 733 வழங்கினார்.
எம்.ஏ.எம்.ராமசாமி ரூ 1 கோடி
அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் இணைவேந்தரும், செட்டிநாடு குழுமத்தின் தலைவருமான எம்.ஏ.எம்.ராமசாமி, தனது மகன் எம்.ஏ.எம்.ஆர்.முத்தையாவுடன் செட்டிநாடு குழுமத்தின் சார்பில் ரூ.1 கோடி வழங்கினார்.
அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் எம்.ராமநாதன் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் ஒரு நாள் ஊதியம் ரூ.1 கோடியே 8 ஆயிரம் வழங்கினார்.
ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த் ரூ.10 லட்சம் வழங்கினார். வி.ஜி.பி. குழுமத்தின் தலைவர் வி.ஜி.சந்தோசம் ரூ.10 லட்சம் வழங்கினார்.
மொத்தம் ரூ.28 கோடி
முதல்வர் ஜெயலலிதாவிடம், 'தானே' புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வுக்காக ஒரே நாளில் ரூ.28 கோடியே 4 லட்சத்து 65 ஆயிரத்து 912 வழங்கப்பட்டது.
இத்துடன் சேர்த்து தானே புயல் பாதிக்க மக்களின் மறுவாழ்வுப் பணிகளுக்காக முதல்வரின் நிவாரண நிதிக்கு வந்துள்ள தொகை ரூ.52 கோடியே 41 லட்சத்து 89 ஆயிரத்து 451 ஆகும்.
இவ்வாறு தமிழக அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.