நீதிபதியிடமிருந்து அபகரிக்கப்பட்ட நிலம் ஆட்சி மாறியதும் தானாகவே திரும்பி வந்தது-ஓ.பி.
சென்னை: திமுக ஆட்சியில் மதுரை மாவட்ட நீதிபதி ஒருவரின் நிலம் ஒருவரால் முறைகேடாக அபகரிக்கப்பட்டது. ஆனால் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் அந்த நிலம் தானாகவே அந்த நீதிபதியைத் தேடிப் போய் விட்டது என்று சட்டசபையில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
சட்டசபையில் நில அபகரிப்பு தொடர்பாக நேற்று திமுக உறுப்பினர் ஜெ. அன்பழகன் பேசினார். அப்போது குறுக்கிட்ட அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறுகையில்,
மதுரையில் நீதிபதி ஒருவரின் பட்டா நிலம், அவருக்கு தெரியாமல் வேறு ஒருவர் பெயரில் பத்திரப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டது. முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்ததும், நில அபகரிப்பு செய்தவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருவதை அறிந்த அந்த நீதிபதி, சம்பந்தப்பட்ட பத்திரப் பதிவு அலுவலகத்தில் தனது நிலம் தொடர்பான வில்லங்க சான்று கோரி விண்ணப்பித்து அதனை வாங்கினார்.
அப்போது, அபகரிக்கப்பட்ட அவரது நிலம் அவரது பெயரிலேயே இருந்தது. அதாவது நிலத்தின் சொந்தக்காரர் பெயருக்கே அந்த நிலம் திரும்பி வந்துவிட்டது என்றார். இதைக் கேட்டதும் அதிமுக உறுப்பினர்கள் மேசைகளைத் தட்டினர்.