ஸ்பெக்ட்ரம்: ப.சிதம்பரத்தை விசாரிப்பது குறித்து சிபிஐ நீதிமன்றம் முடிவு செய்யலாம்-சுப்ரீம் கோர்ட்
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு வழக்கில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தையும் விசாரிப்பது பற்றி சிபிஐ நீதிமன்றமே 2 வாரங்களுக்குள் முடிவு செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் ப.சிதம்பரத்துக்கும் தொடர்பிருப்பதால் அவரையும் விசாரிக்க வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை ஜி.எஸ்.சிங்வி, ஏ.கே. கங்குலி ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் பெஞ்ச் விசாரித்தது. இவர்களில் கங்குலி இன்றுடன் ஓய்வு பெறும் நிலையில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்த பெஞ்ச் வழங்கிய தீர்ப்பில், ப.சிதம்பரத்தை விசாரிப்பது குறித்து சிபிஐ விசாரணை நீதிமன்றமே முடிவு செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது.
மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக ஆ. ராசா இருந்தபோது நிதி அமைச்சராக இருந்தார் ப.சிதம்பரம்.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக ராசா, ப.சிதம்பரத்தை பல முறை சந்தித்து ஆலோசனை நடத்தியதாகவும் நிறுவனங்களுக்கு ராசா அலைக்கற்றையை மிகக் குறைந்த விலைக்கு ஒதுக்கீடு செய்தது சிதம்பரத்துக்கு தெரியாமல் நடந்திருக்காது என்பதும் சுப்பிரமணியன் சாமியின் குற்றச்சாட்டு.
ப.சிதம்பரம் நேர்மையாக செயல்பட்டிருந்தால் 2ஜி ஊழலை தடுத்திருக்க முடியும் என்பதும் அவரது புகார்.
இதனால் ஆ.ராசா மீது சுத்தப்பட்டுள்ள அத்தனை குற்றச்சாட்டுகளும் ப.சிதம்பரத்துக்கும் பொருந்தும் என்பதும் சுவாமியின் வாதமாகும்.
ஆனால், இந்த வாதத்தை ஏற்று ப.சிதம்பரத்தை விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிடவில்லை. மாறாக, இது குறித்து சிபிஐ நீதிமன்றமே முடிவெடுக்கலாம் என்று கூறிவிட்டது. 2 வாரங்களுக்குள் இது குறித்து முடிவெடுக்குமாறும் சிபிஐ நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த விசாரணையில் ப.சிதம்பரத்தையும் சேர்க்கக் கோரி சிபிஐ நீதிமன்றத்தில் சாமி தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை வரும் 4ம் தேதிக்கு சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி ஒத்தி வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் 4ம் தேதியே இந்த விஷயத்தில் தீர்ப்பு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.